"அக்யூஸ்ட்டுக்கு பொங்கல் வைப்போம்.." போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடி டிவீட்!
சென்னை: கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, நாங்கள் பொங்கலும் கொண்டாடுவோம் உங்களுக்கு பொங்கலும் வைப்போம் என்று மத்திய மண்டல ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கஞ்சா விற்பனையைத் தடுக்க தமிழக போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை நாகப்பட்டினம் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்ததை கண்டறிந்து, அந்த வாகனத்தில் வந்த 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்திவரப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 50 லட்ச ரூபாய் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த போலீஸாரைப் பாராட்டி அவருடைய டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், ''நாங்க பொங்கல் கொண்டாட்டத்துல இருக்குறதா நினைச்சிட்டாங்க. நாங்க பொங்கலும் கொண்டாடுவோம், அக்யூஸ்ட்டுக்கு பொங்கலும் வைப்போம். நாகப்பட்டினம் எஸ்.பி ஜவஹர் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். 170 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த கடத்தல்காரர்களைப் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் கஞ்சா விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல்தர அவசர போலீஸ் எண் 100, 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் www.facebook.com /tnpoliceoff1cial என்ற பேஸ்புக் ஐடி, @tnpoliceoffl என்ற ட்விட்டர் ஐடியில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications