வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்.. தமிழகத்தை புயல் தாக்குமா? வானிலை மையம் சொன்ன தகவல்!
வடகிழக்கு பருவமழை வருகிற 20ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சராசரியாக இந்த வடகிழக்கு பருவத்தில் 3 சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்களாக பல மாவட்டங்களில் அபரிமிதமாகவே பெய்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும்.
அதன்படி நடப்பாண்டு செப்டம்பர் மாதத்துடன் பல மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை.. இயல்பை விட கூடுதலாக கொட்டித்தீர்க்குமாம்.. தமிழகத்தில் மழை எப்படி?
வடகிழக்குப் பருவமழை
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின் போது தான் அதிகப்படியான மழை பெறுகின்றன. ஆனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப்பொழிவை தருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை வருகிற 20ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை எப்படி
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா, வடகிழக்கு பருவ மழை வருகிற 20ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும். 88 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை சராசரி மழை பெய்யக் கூடும்.
புயல்கள் உருவாகுமா?
சராசரியாக இந்த வடகிழக்கு பருவத்தில் 3 சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் நிலவும் லாநினா மற்றும் எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிலைமைகள் காரணமாக அதிக மற்றும் தீவிரமான புயல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தை புயல் தாக்குமா
வானிலை மாதிரிகளின் அடிப்படையில் வட ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, மற்றும் வங்கதேசம் அருகே புயல்கள் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. புயல்கள் தமிழகத்தை தாக்குவதை விட இந்த பகுதிகளை அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் வங்க கடலில் புதிய புயல்கள் சுழற்சி உருவாகும். இவ்வாறு கூறினார்.
வங்கக் கடலில் உருவான புயல்கள்
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தை பல புயல்கள் தாக்கியுள்ளன.2 008ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நிஷா புயலாக உருவெடுத்தது. கொட்டித்தீர்த்த கனமழையால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ஜல் புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா, ஒக்கி, கஜா என பல புயல்கள் சென்னையையும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும் சூறையாடியுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு புயல்கள் உருவானாலும் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்று கூறி சற்றே ஆறுதலான தகவலை தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.