இந்தியா மாதிரி இல்லை ஜெர்மனி.. போராட்டம் நடத்தினால் வெளியேற்ற மாட்டார்கள்.. ஐஐடி மாணவர் ஆதங்கம்
Recommended Video
சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஐ.ஐ.டி-மெட்ராஸில் பயின்ற, ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால், குடிவரவு அதிகாரிகளால் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த உத்தரவு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகோப் லிண்டெந்தால், தனது நாட்டுக்கு விமானத்தில் கிளம்பும் முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடந்த சம்பவங்களை விவரித்தார். அவர் கூறியதை பாருங்கள்:
நான் விளையாட்டு நிகழ்வுக்காக பெங்களூர் சென்றிருந்தேன். அங்கேயிருந்து சென்னை வர உத்தரவிடப்பட்டேன். இன்று காலை சென்னை அடைந்த பிறகு, குடிவரவு அதிகாரிகளை உடனடியாக சந்திக்க என் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் எனக்கு அறிவுறுத்தினார்.
அந்த ஒரு வாசகம்.. அதனால்தான் அதிகாரிகள் ஆத்திரம்.. ஜெர்மனி மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம் ஏன்?
விசாரணை ஆரம்பம்
நான் அங்கு சென்றதும், இந்தியாவில் எனது குடியிருப்பு அனுமதி தொடர்பான சில நிர்வாக சிக்கல்களை அவர்கள் மேற்கோள் காட்டி பேசினர். நான் அவர்களின் கேள்விகளுக்கு சரியாக விடை அளித்தேன், எனது குடியிருப்பு அனுமதி தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது தெளிவானது. இதையடுத்து, அதிகாரிகள், எனது அரசியல் மற்றும் பொழுதுபோக்குகளைப் பற்றி என்னிடம் கேட்கத் தொடங்கினர். இது ஒரு விரிவான சாதாரண உரையாடலாகத்தான் இருந்தது. பிறகு CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நான் பங்கேற்றது பற்றி அவர்கள் கேட்டார்கள். ஆர்ப்பாட்ட கலாச்சாரம் குறித்து விவாதித்தோம்.
3 அதிகாரிகள்
இந்த உரையாடலின் முடிவில், எனது மாணவர் விசா விதிகளை மீறியதற்காக, நான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறினர். நான் இதற்கான உத்தரவு கடிதத்தைக் கேட்டபோது, அவர்கள் எனது பாஸ்போர்ட்டைத் திருப்பி தந்து, 'நீங்கள் வெளியேறலாம்' என்று சொன்னார்கள்.
கிறுஸ்துமஸ் விடுமுறை
கடிதம் உங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் எனக்கு இதுவரை கடிதம் கிடைக்கவில்லை. இதன்பிறகு நான் ஐ.ஐ.டி வளாகத்திற்கு விரைந்து சென்று, என் டிக்கெட்டை முன்பதிவு செய்து, எனது, எல்லா பொருட்களையும் பேக் செய்து விமான நிலையத்திற்கு புறப்பட்டேன். அதிகாரிகள் விசாரணையை முடித்ததும், டீன் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரியிடமிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. நான் நாளைக்கு கிளம்பிக் கொள்ளலாம். அவசரம் வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்தார். நாளை கிறிஸ்துமஸ் தினமாக இருக்கப் போவதால், நான் உடனடியாக வெளியேற முடிவு செய்தேன்.
ஆனால் இதுவரை எனது பெற்றோருக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை.
சுதந்திரம் இல்லை
எல்லா போராட்ட குழுக்களிலிருந்தும் நான் விலகிவிட்டேன், என்று நான் விளக்கினேன். போராட்டத்தில் பங்கேற்பது தவறு என அதிகாரிகள் தெரிவித்தனர். இது எல்லாமே மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றியது என்று நான் அதற்கு பதிலளித்தேன். எனது கருத்துக்களை விளக்கினேன். நான் மெட்ராஸ் ஐ.ஐ.டி கேம்பஸை நேசிக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஆனால் நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஜெர்மனியில், சட்டப்பூர்வமான இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக, யாரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதில்லை. இவ்வாறு லிண்டெந்தால் கூறினார்.
நன்றி தெரிவித்த அமைப்பு
ஐஐடி மெட்ராஸில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்டின், சிந்தா பார் என்ற அமைப்புதான். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த நாட்டில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மனிதநேயம் குறித்த அக்கறைக்கும் ஜாகோபுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது. தெற்கு ஜெர்மனியைச் சேர்ந்த லிண்டெந்தால், ஐ.ஐ.டியில் போராட்டத்தை ஏற்பாடு செய்த சிந்தா பார் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.