நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளை அள்ளிய சுயேட்சைகள்...எப்படி தெரியுமா?
பணம் பதவி செல்வாக்கு இருந்தால் மட்டுமே அரசியலில் ஜெயிக்க முடியும். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வென்று கவுன்சிலர்களான நிலையில் நகராட்சி பேரூராட்சிகளிலும் தலைவர்களாக வென்று ஆச்சரியத்தை ஏற்பட
சென்னை: உள்ளூர் செல்வாக்கு, பண பலம், அரசியல் பலம், ஆள் பலம் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதையும் மீறி சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் பதவியை தட்டிப்பறித்துள்ளனர் சுயேட்சைகள்.
தைப்பொங்கல் ஜல்லிக்கட்டை விட படு சுவாரஸ்யமாக நடந்து முடிந்துள்ளது நகர்புற உள்ளாட்சி மறைமுகத் தேர்தல். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியாக வேட்புமனு தாக்கல் செய்ய படு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நடத்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் எதிர்ப்பு தெரிவிக்க, நடத்தியே ஆக வேண்டும் என்று சொல்லி மறைமுகத் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளனர் போட்டி வேட்பாளர்கள் பலர். திமுகவில் நடந்த கூத்து ஒரு பக்கம் இருக்க சில நகராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் தலைவர் ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

பண பலம் மிக்க சுயேட்சைகள்
கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு அளிக்காமல் கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில் பலர் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்றனர். பணபலம் மிக்க பலர் சொந்த செல்வாக்கில் சுயேட்சையாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று தங்களின் பலத்தை நிரூபித்தனர். அவர்களுக்கு எல்லாம் மறைமுகத் தேர்தலில் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது.

சுயேட்டை வேட்பாளர் தலைவரானார்
கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சசிகுமார் வெற்றி பெற்றார். 10 சுயேட்சைகள் வென்ற கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சைகள் ஆதரவுடன் கைப்பற்றினார் சுயேட்சை வேட்பாளர் சசிகுமார். மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 10 வார்டுகள் சுயேட்சைகளும், 5 திமுகவும் வெற்றிப்பெற்றிருந்தது. சசிகுமார் இந்த பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் என்பதால் தனது செல்வாக்கில் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைகழுநாடு பேரூராட்சி தலைவராக 23 வயதான வேட்பாளர் சம்யுக்தா தேர்வானார். அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உதவியுடன் வெற்றி பெற்றார்.

குமாரபாளையம் நகராட்சி
இதே போல குமாரபாளையம் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார். குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 14 வார்டுகளை தி.மு.கவும், 10 வார்டுகளை அ.தி.மு.கவும், மீதமுள்ள 9 வார்டுகளை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளன. இந்த ஒன்பது சுயேச்சைகளில் 3 வது வார்டில் போட்டியிட்டு வென்றவர், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன்.

குமாரபாளையத்தை கைப்பற்றிய சுயேட்சை
குமாரபாளையத்தை கைப்பற்ற தி.மு.கவுக்கு 3 கவுன்சிலர்களும், அ.தி.மு.கவுக்கு 7 கவுன்சிலர்களும் தேவை. இந்த நிலையில், தி.மு.கவோ அல்லது அ.தி.மு.கவோ நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற, சுயேச்சைகளின் தயவை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் திமுக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கினார் சுயேட்சை வேட்பாளர் விஜய் கண்ணன் அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் குமாரபாளையம் நகராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார் விஜய் கண்ணன். சொந்த செல்வாக்கு ஒருபக்கம் கவுன்சிலர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் தெம்பு மறுபக்கம் இருந்தால் மட்டுமே தலைவராக துணைத்தலைவராக ஜெயிக்க முடியும் என்பதை இந்த மறைமுக உள்ளாட்சித் தேர்தல் உணர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications