மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம்..இதை செய்தால் தப்பிக்கலாம்..விழிப்புணர்வு ரொம்ப அவசியம்
சென்னை:
இந்தியா டர்ன்ஸ் பிங்க் நிறுவனமும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கமும் இணைந்து சென்னை விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கத்தை நடத்தினர். இந்த நிகழ்வில் மேற்குறிப்பேற்றவர்களும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்திய பெண்கள் மத்தியில் அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் மார்பக புற்றுநோய் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. 32.8 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் இறப்பு விகிதம் 64% ஆக உள்ளது. வருமுன் காப்பதே இதற்கான தீர்வாகும். இக்கொடிய நோயின் அறிகுறிகள், காரணிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிய முறையில் குணப்படுத்த முடியும்.
இந்தியா டர்ன்ஸ் பிங்க்
'இந்தியா டர்ன்ஸ் பிங்க்' என்பது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொண்டு நிறுவனமாகும். கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆரம்பநிலை கண்டறிதல் முகாம்களை நடத்தி வருகிறது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்தில் 'பிங்க்டோபர்' என்ற தலைப்பில் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா, கல்யாணமாயி உடன் இணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறது. சென்னை விமான நிலையம் முழுவதும் பிங்க் நிற விழிப்புணர்வு பாதைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
7வது ஆண்டாக இந்த ஆண்டும் 'பிங்க்டோபர்' (Pinktober 2022) மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் 1 முதல் 31ஆம் தேதிவரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, 'பிங்க் பெடல்', 'பிங்க் பார் மை மாம்', 'பிங்க் ரிப்பன் வாக்' போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. வாரம் இருமுறை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம், நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. 'மார்பக புற்றுநோய் இல்லா இந்தியா 2030'ஐ உருவாக்குவதே 'இந்தியா டர்ன்ஸ் பிங்க்'ன் லட்சியமாகும்.
செய்தி வாசிப்பாளர்கள் சங்கம்
கடந்த வாரம் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தங்களின் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தனது அண்ணி அவர்கள் 33வது வயதில் மார்பக புற்றுநோயினால் உயிரிழந்தது குறித்து பகிர்ந்து கொண்டார். பெண் செய்தி வாசிப்பாளர்கள் பலரும் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் குறித்து பேசினர். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றும் பகிர்ந்து கொண்டனர்.
பெண்கள் அதிகம் பாதிப்பு
புற்றுநோய்களில் முக்கியமானது மார்பகப் புற்றுநோய். இந்திய பெண்கள் மத்தியில் அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்ட இயலாது. மஞ்சள் அதிகம் பூசி குளிக்க வேண்டும். மார்பகங்களில் மஞ்சள் பூச வேண்டும் என்றும் செய்திவாசிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் இந்த மார்பக புற்றுநோய் வருவதாக கூறினர்.
தப்புவது எப்படி
இறுக்கமான ப்ரா அணிவதன் மூலமும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. என ரத்த ஓட்டம் சீராக வீட்டிற்குள் இருக்கும் போதாவது ப்ரா அணியாமல் இருக்க வேண்டும் என்றும் செய்தி வாசிப்பாளர்கள் கூறினர். சிலர் மார்பக புற்றுநோயின் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து உயிர் தப்பியவர்கள் குறித்தும் பேசினர்.
ஒரே தீர்வு
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான ஒரே தீர்வு, அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மட்டும்தான். சில வாழ்க்கை முறை மாற்றம் மூலம் ஆபத்து காரணிகள் குறையுமே தவிர முழுமையாக விடுபட இயலாது. கர்ப்பவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இருப்பதுபோல, மார்பகப் புற்றுநோய்க்கு தடுப்பூசி இல்லை. எனவே, மார்பகப் புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறிவது மிகவும் அவசியமானது என்றும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பிங்க் நிற உடை அணிந்து பங்கேற்றனர். ராம்ப் வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.