அந்த ரகசியம் பூராவும் வெளியே வரும்.. அதிமுகவை மிரள வைக்கும் திடீர் புரட்சி!
சென்னை: ஒரே ஒரு தூக்கல்தான்.. ஒட்டுமொத்த டிரெண்டிங்கிலும் அதிமுக லீடாகி விட்டது. தேசிய அளவிலான அரசியல் டிரெண்டிங்கில் காஷ்மீர், அமித்ஷாவை அடுத்து அ.தி.மு.க.தான் இடம் பிடித்திருக்கிறது.
அமைச்சரவையிலிருந்து ஒரு மினிஸ்டருக்கு கல்தா கொடுக்கப்பட்ட விவகாரமும், அக்கட்சியின் தலைமையை 'ரகசியங்கள்' எனும் வார்த்தையை காட்டி அக்கட்சியினரே மிரட்டும் விஷயமும்தான் செம்ம ஹாட்.
என்ன விவகாரம்?....
தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா. அந்த தொகுதியிலும், அந்த மாவட்டத்திலும் ஏகப்பட்ட சீனியர்கள் இருக்கையில் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் போஸ்டிங்குக்கு இளம் சத்யா திடுதிப்பென்று ஏறி வந்ததில் பல புகைச்சல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தென் சென்னை மாவட்டத்தினுள் அடங்கும் தி.நகர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சேர்ந்த சுமார் நானூறு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒரே நாளில் அடியோடு நீக்கப்பட்டனர். அடுத்து அந்த பகுதிகளில் மளமளவென பலர் நியமிக்கவும்பட்டுக் கொண்டிருந்தனர்.
பதவியை இழந்தவர்கள், மா.செ. சத்யா வீட்டின் முன் வந்து நின்று 'பணம் வாங்கிட்டு கட்சி பதவியை விற்ற சத்யாவே வெளியே வா!' என்று கூச்சலிடுவதும், கூப்பாடு போடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனாலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் உள்ளே நுழைய கூடாதென போலீஸ் தடுத்தபோது 'ஆளுங்கட்சி ஆளுங்க நாங்க. எங்க அலுவலகத்துக்குள்ளே நாங்க உள்ளே நுழைய கூடாதுன்னு போலீஸ் தடுப்பதா? என்று பொங்கியவர்கள் சத்யா மற்றும் இரு முதல்வர்களுக்கும் எதிராக கடும் வார்த்தைகளை உபயோகித்து ஆவேசப்பட்டனர். அவர்களை போலீஸார் கடுமையாக மிரட்டி அடக்கி, கலைய வைத்தனர்.
பின்னர் அதிருப்தியாளர்கள் சார்பாக சிலர் மட்டும் அலுவலகத்தினுள் சென்று தங்கள் புகார்களை சத்யா மீது பதிவு செய்தனர். தங்கள் பிரச்னை பற்றி வெளிப்படையாக பல விஷயங்களைப் போட்டு தாக்கிய அதிருப்தியாளர்கள் "அம்மா இருந்தப்ப இருந்த கட்சி வேற, இப்ப வேற. இந்த தி.நகர் சத்யா சும்மாவே சர்வாதிகாரம் பண்ணுவார். ஆனால் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்னு அவர் கையில பதவிகளை கொடுத்ததும் ஓவரா ஆடுறார்.
எங்களோட சந்தேகம், அம்மா இறந்த பிறகு இவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் பதவி கிடைச்சது? அப்படிங்கிறதுதான். அது சம்பந்தமா தோண்டி விசாரிச்சப்பதான் பல ரகசியங்கள் தெரிய வந்துச்சு. கட்சி தலைமைக்கும் இவருக்கும் இடையில் நிறைய ரகசியங்கள் இருக்குது. இவரிடம் அந்த ரகசியங்கள் இருக்கிறதாலேதான் பதவி கொடுத்திருக்காங்க. கூடவே இவர் பேச்சை கேட்டுட்டு நானூறு நிர்வாகிகளை ஒரே நாளில் நீக்கியிருக்காங்க. அம்மா காலத்தில் கூட இப்படியெல்லாம் நீக்கம் நடந்ததில்லை.
இப்படி ஆட்டம் போடுற சத்யாவை உடனடியா மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கணும். இல்லேன்னா இவருக்கும், தலைமைக்கும் இடையிலான ரகசியங்களை வெளியில் போட்டுடைப்போம்." என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.
இந்த திடீர் தலைவலியும், 'ரகசியங்கள்' அது இதுவென கிளம்பியிருக்கும் பஞ்சாயத்துகளும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் சற்றே பீதியடைய வைத்துள்ளது. அதிருப்தியாளர்கள் கோவத்தில் ஆளாளுக்கு எதையாவது ஆதாரமற்ற விஷயங்களை கொளுத்திப் போட்டால், மீடியாக்களும் பரபரப்புக்காக அதை பெரியளவில் பரப்புவார்களே! இதனால் கட்சியின் பெயர் கெடுமே! எனும் கவலைதானாம் அது.
சர்தான்!
- ஜி.தாமிரா