பெரிய ட்விஸ்ட் ரெடி.. எடப்பாடி எடுக்கப்போகும் அதிரடி முடிவு.. ‘டீசர் வெளியிட்டாச்சு’.. இனி சம்பவம்!
சென்னை : பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரியவந்துள்ளதால், பாஜகவுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
அதற்கு ஒரு முன்னறிவிப்பாகவே, நேற்று தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுக பிளவு விவகாரத்தில் ஆரம்பம் முதலே தனக்கு சாதகமான எந்த விளைவுகளையும் பாஜக ஏற்படுத்தவில்லை என்றும், நம்பவைத்து ஏமாற்றிவிட்டனர் என்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓபிஎஸ் - தினகரன் - சசிகலா ஆகியோரை ஓரணியில் இணைக்கும் நடவடிக்கைகளிலும் பாஜக இறங்கியிருப்பதை அறிந்து, எடப்பாடி பழனிசாமி கொந்தளித்துவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்!
ஈபிஎஸ் மிஸ்ஸிங்
நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், ஈபிஎஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
அரசியல் பரபரப்பு
அதேசமயம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விருந்தில் கலந்துகொண்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் சூழலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என இருதரப்பும் முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் டீ பார்ட்டியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை நாடிய ஓபிஎஸ் ஈபிஎஸ்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பாஜக தலைமை அழைத்தது. இந்த நிகழ்வில் ஓபிஎஸ் கலந்துகொண்டதால், எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. தனது சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை வழங்கும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, ஓபிஎஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் டெல்லிக்குச் செல்ல முடியவில்லை.
டெல்லியில் ஏமாற்றம்
எடப்பாடி பழனிசாமி 5 நாள் பயணத் திட்டத்தோடு டெல்லி சென்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திப்பது ஈபிஎஸ்ஸின் முக்கிய திட்டமாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஈபிஎஸ்ஸை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து பயணத்திட்டத்தை மாற்றி சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. அப்போதே கடுமையாக அப்செட் ஆகியிருந்தார் ஈபிஎஸ்.
புறக்கணிப்பு
காரணம், அதற்கு முன்பு, தனது ஆதரவாளர்கள் பலர் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறை சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றதால், பாஜக மீது சந்தேகமடைந்திருந்தார் ஈபிஎஸ். அதிமுகவில் மோதல் நிகழ்ந்து வரும் சூழலில், ஓபிஎஸ் டெல்லி சென்று வந்த பிறகு, தான் குறிவைக்கப்பட்டது அவருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் தான் டெல்லி சென்றும், சந்திக்காமல் பாஜக தலைமையால் புறக்கணிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
கடும் அதிருப்தி
பின்னர், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக சென்னை வந்தபோது, அவரை எப்படியாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என முயன்றார். ஆனால், வரவேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், தனியாகச் சந்தித்துப் பேச அழைக்கவில்லை. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வத்துடன் சில நிமிடங்கள் விமான நிலையத்தில் பேசினார் மோடி. இதனால், தான் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தார். போதாக்குறைக்கு, தமிழக பாஜகவினரும், ஈபிஎஸ்ஸுக்கு சரியான முறையில் பதில் அளித்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
பாஜகவின் பிளான்
இதற்கிடையே, பாஜக தலைமை ஓபிஎஸ் - சசிகலா - தினகரன் ஆகியோரை ஓரணியில் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. டிடிவி தினகரனும் சமீபகாலமாக பாஜக கூட்டணியில் சேர்வதில் விருப்பம் உள்ளது என்கிற ரீதியிலேயே பேசி வருகிறார். இந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். பலமான கூட்டணி என்பது பாஜகவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஈபிஎஸ்ஸோ, ஓபிஎஸ் - சசிகலாவுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று முரண்டு பிடிக்கிறார். இதனால், பாஜக அவரை விட்டுப் பிடிக்க நினைக்கிறதாம்.
தீவிர ஆலோசனை
இதனால், பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்வதில்லையாம். பாஜக தலைமை தங்கள் அணியை நடத்தும் விதம் எடப்பாடி பழனிசாமிக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் தொடங்கி, பெரும்பான்மையான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆதரவைக் கொண்டிருந்தும் பாஜக, ஓபிஎஸ்ஸுக்கே சாதகமாக நடந்து கொண்டு வருவது பற்றி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திடீர் முடிவு
அப்போது, பாஜகவை இனியும் நம்புவதில் பலன் இல்லை, நாம் எதிர்த்து நிற்கும் நிலை வந்தாலும் வரலாம் என ஈபிஎஸ் கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படியே, தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை ஈபிஎஸ் தரப்பு புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சென்னையில் இருந்தும் கூட இந்த விருந்துக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளார் ஈபிஎஸ். பாஜக மீது அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக ஈபிஎஸ் இந்த ஆபத்தான முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
விரைவில் அதிரடி
இது பாஜகவின் பல்ஸை பார்ப்பதற்காக ஈபிஎஸ் மேற்கொண்ட டெஸ்ட் என்கிறார்கள். இதிலும் தனக்கு சாதகமான மாற்றங்கள் இல்லையென்றால், பாஜகவை நேரடியாகவே எதிர்க்கும் முடிவுக்கும் ஈபிஎஸ் வருவார் என்கிறார்கள். பாஜகவின் முடிவு, ஓபிஎஸ், ஈபிஎஸ் சசிகலா, தினகரன் இணைவு என்பதாகவே தொடர்ந்தால், கூட்டணியில் இருந்து பாஜகவை நீக்கும் முடிவுக்கும் ஈபிஎஸ் செல்வார் என்கிறார்கள்.
ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலாம்
பாஜகவுக்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு நிலவுகிறது என்று தெரிந்தும் நான்காண்டு கால ஆட்சிக்கு மேலே இருந்து உதவியதற்காக பாஜகவுக்கு அணுசரணையாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பஞ்சாயத்தின் காரணமாக பாஜகவை எதிர்க்கும் சூழலுக்குச் சென்றுள்ளார். விரைவில் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவுகளை எடுப்பார் என்றும், அது தமிழக அரசியலில் பெரிய ட்விஸ்ட்டையே ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.