திமுக கூட்டணிக்கு பாமக வராமல் போனதற்கு யார் காரணம்.. பரபரக்கும் அறிவாலயம்
Recommended Video
சென்னை: திமுக கூட்டணிக்கு பாமக வராமல் போனதற்கு யார் காரணம் என்ற பரபரப்பான விவாதம் அறிவாலயம் வட்டாரத்தில் அதி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
சமீப காலத்தில் திமுகவின் முக்கிய முடிவுகள் எல்லாம் ஸ்டாலினின் மருமகன் சபரீசனால் எடுக்கப்படுகிறது என்பது பரவலாக அனைவரும் அறிந்ததே. இதில் திமுக சீனியர்களுக்கு அதிருப்தியும் வயிற்று எரிச்சலும் உண்டு. தற்போது இந்த அதிருப்தி இன்னும் அதிகமாகியுள்ளதாக கூறுகிறது அறிவாலயம் வட்டாரங்கள்.
திமுக அணிக்குள் எப்படியேனும் பாமகவை கொண்டு வந்து விட வேண்டும் என துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஜெகத் ரட்சகன் உட்பட சில சீனியர் திமுக தலைவர்கள் விரும்பினர். ஆனால் பாமக தான் நினைத்ததற்கு மேலாக அதிமுக அள்ளித்தரவே அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டது.
பாமகவின் இந்த முடிவு துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாமகவுக்கு இருக்கும் 5.5% வாக்குகள் வடமாவட்டங்களில் நமது வெற்றியை உறுதிசெய்யும் என துரைமுருகன் ஸ்டாலினிடம் கூறியுள்ளார். கடந்த 2016- சட்டமன்ற தேர்தலில் நடந்தது போல் இப்போதும் நடந்து விட கூடாது என் ஸ்டாலினும் நினைத்துள்ளார். இதற்கேற்றாற்போல பாமகவும் திமுகவுடன் பேசி வந்துள்ளது. தற்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியும் இதை உறுதிபடுத்தினார்.
[Read more: போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா?]
பாமகவை திமுக பக்கம் அழைத்து வந்து விடலாம் என்றெண்ணிய ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொடர்ச்சியாக அன்புமணியுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. சபரீசனும் அன்புமணியும் பாமக-அதிமுக கூட்டணி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்னதாக சென்னையில் ஒரு ஹோட்டலில் நள்ளிரவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பிலும் உள்ள சிக்கல்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசியபோது தீர்வுக்கு வராத சில விசயங்களை அன்புமணி குறிப்பிட்டாராம் அப்போது சபரீசன் தரப்பில் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டவில்லை.
இதன் பிறகு திமுக தரப்பிலிருந்து பாமக தரப்புக்கு எந்தவித பதிலும் செல்லவில்லை. திமுகவில் இருந்து உரிய பதில் வரும் என்று காத்திருந்த பாமக தரப்பு இனிமேலும் காத்திருந்து பலனில்லை என்றே எடப்படியிடம் பேச தொடங்கியுள்ளனர். இதன் பிறகு பாஜக தரப்பிலிருந்தும் பாமகவிடம் பேசியதன் விளைவே பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்று கூறுகிறார்கள்
இதில் அன்புமணியை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய சபரீசன் சரிவர பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என்றும், அதனாலேயே பாமக நம் பக்கம் திரும்பவில்லை என்பதும் துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்களின் எண்ணமாம். பாமகவிடம் கட்சியின் சீனியர்கள் “உரிய” முறையில் பேசியிருந்தால் பாமக நம்மை விட்டு சென்றிருக்காது என்றும் அவர்கள் இப்போது பொங்கி வருகிறார்களாம்.