போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா?
Recommended Video
சென்னை: எல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் இதைக் காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தலை தள்ளிப் போடத் திட்டமிடுவார்களோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உதிக்க ஆரம்பித்துள்ளது.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இப்படி ஒரு தாக்குதல் நிகழலாம் என்று உளவுத்துறை தகவல் தேர்வித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தாக்குதல் நடந்த அன்று காங்கிரஸ் கட்சி கூறியது போல மோடி படப்பிடிப்பில் இருந்தாரா அன்றைய தினம் அவரது நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பது போன்ற கேள்விகளை மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா போன்றோர் எழுப்பியும் இதுவரை எந்த பதிலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு பிறகு ராஜஸ்தானில் பேசிய பிரதமரின் பேச்சும் புல்வாமா தாக்குதலை அரசியல் ரீதியாக திருப்புவதாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே பேசினர். இந்த நிலையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அளித்து திரும்பியுள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் நமது எல்லையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர்களின் போர் விமானத்தை நமது நாட்டு வீரர்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதன் பிறகு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்றே கூறிவருகிறது.
பாகிஸ்தான் எத்தனை முறை இந்தியாவிடம் தோற்றாலும் அந்நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பயந்து நமது நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவே விரும்பும். இந்நிலையில் இதற்கு முன் வந்த தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாமே பாஜகவுக்கு எதிராக வந்த சூழலில் இந்த தாக்குதலை பா.ஜ. கட்சி தனக்கு சாதகமாக்க முயல்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
தேசப்பற்று, இறையாண்மை என்ற வார்த்தைகள் எப்போதுமே இளைஞர்களை கட்டிப் போடக்கூடியது. அதையே தனக்கு சாதகமாக்க பாஜக முயல்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. உளவுத்துறையின் தகவலை உதாசீனப்படுத்தியது யார், தாக்குதல் நடந்த அன்று பிரதமரின் நிகழ்வுகள் குறித்து எதுவும் பேசாத பாஜக பாலகோட் தாக்குதலை தங்களது பெருவெற்றியாக நாடு முழுவதும் பறை சாற்ற ஆரம்பித்து விட்டது.
[Read more: அபிநந்தன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் வர வேண்டும்.. தந்தை வர்த்தமான் பிரார்த்தனை]
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை கனவாக வைத்துள்ள பாஜக இப்போது தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகளும் இருக்க கூடாது என்றே நினைக்கிறது. இப்போதிருக்கும் இந்த சூழலில் போரின் விளைவுகள் தங்களுக்கு சில இடங்களில் சாதகமாக திரும்பியுள்ளதை கவனித்துள்ள பாஜக இதை முழுமையாக தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. இதன் வெளிப்பாடுதான் எடியூரப்பா போன்ற தலைவர்களின் தேர்தல் ஆதாய பேச்சுக்கள்.
எடியூரப்பா சாதாரண தலைவர் இல்லை. மூத்த தலைவர். பாஜக தலைமையின் உள்ளுணர்வை அறிந்தவர். அவரே தேர்தல் ஆதாயத்திற்கு இந்த் தாக்குதலை மேற்கோள் காட்டிப் பேசுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இருக்காது. ஆகவே பாஜக விரும்புவது போலவே மீண்டும் ஒரு உக்கிரமான யுத்தத்தை நடத்தி விட்டு அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய பாஜக திட்டமிடலாம் என்ற பேச்சுக்களும் கிளம்பியுள்ளன.
[Read more: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!]
மேலும் இதையே காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தலும் தள்ளிப் போகும் என்ற பேச்சும் அடிபடுகிறது. போர்க்காலங்கள் அல்லது பதற்றமான சமயத்தில் இதுபோல செய்ய முடியும். இதை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. மத்திய அரசு சொன்னால் அதை தேர்தல் ஆணையம் கேட்டுத்தான் ஆக வேண்டும். வராத புயலுக்காக தமிழகத்தில் இடைத் தேர்தல் தள்ளிப் போடப்பட்டது. எனவே போர்க்காரணத்தை சுட்டிக் காட்டி நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப் போடப்படம் சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது.