ஆதார் - வாக்காளர் அட்டையை இணைத்தால் சிக்கல்? எச்சரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள்
சென்னை: நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் வாக்குரிமை பறிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு அச்சங்களை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதனை விரிவாக காண்போம்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை முன்வைத்தன. அப்போதே இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சாப்பாட்டுக்கு முண்டியடிப்பு: 'ஆதார் கார்டு இல்லன்னா விருந்து நோ'.. உபியில் கல்யாண வீட்டில் கூத்து!
வீடு வீடாக இணைப்பு
தமிழ்நாட்டிலும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்றும், சிறப்பு முகாம்களை அமைத்தும் துரிதமாக ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்ப்புகள் எழுந்த பகுதிகளில் கருத்துக் கேட்பு மற்றும் விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல பகுதிகளில் மக்களை கட்டாயப்படுத்தி இந்த இணைப்பு பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
கட்டாயம் இல்லை
இது தொடர்பான செய்திகள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளான நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் இல்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். தேர்தல் ஆணையமும் இந்த இணைப்பு கட்டாயம் இல்லை என்றே விளக்கமளித்தது.
கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்
ஆனால், அரசு அதிகாரிகள் மக்கள் மத்தியில் இதை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் சாமானிய மக்களும் இதை இணைத்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டு 33% க்கும் அதிகமானோர் இணைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உச்சநீதிமன்றத்தில் இதற்கு முறையான அனுமதி கிடைக்காமல் மசோதா ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசு இந்த இணைப்பை நடத்தி வருகிறது.
உச்சநீதிமன்றம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, "தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான உரிமைகளை மீறும் வகையில் அமைந்து இருக்கிறது. இந்த இணைப்பு தன்னார்வமாக செய்யக்கூடியது. இதை கட்டாயமாக்க முடியாது." என்று தெரிவித்தது.
குடிமக்கள் அல்லாதோருக்கு ஓட்டு
கடந்த டிசம்பர் மாதம் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மக்களவையில் பேசியபோது, "ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இது குடிமக்கள் அல்லாதோர் வாக்களிப்பதற்கு உதவும்." என்றார்.
வாக்காளர் ரகசியம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா வாக்காளர்கள் வாக்களித்தன் ரகசியத்தை மீறும் வகையில் உள்ளது. இது ரகசிய வாக்களிப்பு மற்றும் வாக்காளரின் தனியுரிமை என்ற அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளது." என்று குற்றம்சாட்டியது.
ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழு
இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டப்போது அதற்கு எதிராக 140 ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (Constituition Conduct group) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த குழுவை சேர்ந்த மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் கே.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி இருந்தார்.
வாக்குரிமை நீக்கம்
இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அவரளித்த பேட்டியில், "ஆதாருடன் நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டையை இணைத்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆதார் தொடர்பான மென்பொருளை தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த மென்பொருள் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் போலி வாக்காளர்கள் என்று கூறி ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
செல்போன் எண்
ஒரு தவறு செய்ததை நிரூபிக்கும் வரை வாக்குரிமையை பறிக்கக்கூடாது என்பது விதி. ஆதாருடன் இணைப்பதன் மூலம் வாக்காளரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள கணக்குகளை கண்காணிக்கலாம். இதன் மூலம் வாக்காளரின் அரசியல் நிலைபாடுகளை அறிய முடியும். அத்துடன் வாக்காளர்களை குறிவைத்து செல்போன், சமூக வலைதள பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
இதுபோல் அமெரிக்காவில் 2016 அதிபர் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி வெளியில் வந்தது. உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி பி.என்.பானர்ஜி தலைமையில் தரவுகளை பாதுகாப்பதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அவர் 'ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது ஆபத்தான சூழலை உருவாக்கும்.' என எச்சரித்து இருக்கிறார்." என்றார்.