பெரிய ரிஸ்க்.. ‘எல்லா சான்ஸும் போயிடும்’.. ‘நாக் அவுட்’- ஓபிஎஸ் அப்பீல் யாருக்கு சாதகம்?- பரபர தகவல்
சென்னை : ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம், ஒரு பெரிய 'ரிஸ்க்' எடுக்கிறார் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீடு அவருக்கு உண்மையிலேயே சாதகமாக அமையுமா என்றால், தேர்தல் ஆணையத்தில் நிறைய சிக்கல்கள் எழும் எனக் கூறுகிறது சட்ட வல்லுநர்கள் வட்டாரம்.
ஆட்டத்தை மாற்றும் எடப்பாடி.. '3 கணக்குகள்’ 'கேப்பில் ஏவும் அஸ்திரம்’.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஸ்கெட்ச்!
மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தேனியில் ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், வரும் திங்கட்கிழமை ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட வல்லுநர்கள்
ஓபிஎஸ் தொடரும் மேல்முறையீட்டு வழக்கு அவருக்கு சாதகமான விளைவைக் கொடுக்குமா என்றால், 'ரிஸ்க் தான் அதிகம்' என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தில் அவரது பேச்சு சுத்தமாக எடுபடாது, இத்தனை காலமாக அவர் அனுப்பிய மனுக்களை எல்லாம் தேர்தல் ஆணையம் நிராகரித்து விடும் என்கிறார்கள்.
அதிமுகவில் உரிமை இல்லை
தனியார் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, உச்சநீதிமன்றம் செல்வதை ஓ.பன்னீர்செல்வம் ரிஸ்க் எடுக்கிறார் என்பதாகத்தான் பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுமானால், இனி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் எந்தவித உரிமையும் இல்லை என்றாகிவிடும் எனக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைய முடிவு எப்படி இருக்கும்?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தால், அது ஓ.பன்னீர்செல்வத்தை தேர்தல் ஆணையத்தில் பெரிய அளவில் பாதிக்கும். ஓபிஎஸ் இன்றைய தேதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என இறுதி முடிவுக்கு வந்துவிடும். உச்ச நீதிமன்றத்துக்கு முழுமையாக எதிராக தேர்தல் ஆணையம் செயல்படாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையே இறுதியானதாக தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளும்.
வாய்ப்பே இல்லாமல் போகும்
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றால், நீங்கள் இப்போது அதிமுகவிலேயே இல்லை, எனவே நீங்கள் இரட்டை இலைச் சின்னம் கேட்பதற்கான உரிமையே இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துவிடும். தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளே அவருக்கு இல்லாமல் போகும் என்கிறார்கள்.
நாக் அவுட் சுற்று
ஏனெனில், இனி வரவிருப்பது ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை நாக் -அவுட் சுற்று. எடப்பாடி பழனிசாமியாவது, தனது ஆதரவு நிர்வாகிகள் அளித்துள்ள பிரமாண பத்திரத்தை வைத்து தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியும். ஆனால், ஓபிஎஸ் தரப்பு வசம் இருப்பதோ சட்ட விதிகள் தான். நீதிமன்றமும் கைகொடுக்காவிட்டால் ஓபிஎஸ் தரப்பு வலுவிழந்துவிடும். எனவே ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம். இதனால், இந்த அப்பீல், ஓபிஎஸ் அதிமுகவில் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான போராட்டம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.