அதிமுகவில் இருந்து திமுகவுக்கு ‘டைவ்’ அடிக்க தயாராகும் முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்! ஓஹோ!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் திமுக பக்கம் செல்ல 'கிரீன் சிக்னல்' காட்டி வருவதாக அரசல் புரசலாக தகவல்கள் அலையடிக்கின்றன.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்தப் புள்ளி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பை கடுமையாக விளாசிப் பேசி வருபவர்.
ஓபிஎஸ்ஸுடன் நெருக்கமாக இருந்து வரும் அவர், கட்சியின் இழுபறி நிலை காரணமாக எதிர்காலம் குறித்த யோசனையில் இறங்கி இருப்பதாகவும், அதனால் ஆளுங்கட்சி பக்கம் செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைமைக்கு நெருக்கமாகவும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்காகவும் இருக்கும் திமுகவின் முக்கிய புள்ளியிடம் ஓபிஎஸ் அணியின் அந்த நிர்வாகி பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

உட்கட்சி மோதல்
அதிமுகவில் கடந்த சிலபல மாதங்களாக நிலவி வரும் கடுமையான உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள் அப்செட்டில் உள்ளனர். அதிமுக யாருக்கு என ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி வருவதால், நிர்வாகிகளும் குழப்பத்திலேயே உள்ளனர். தங்கள் அணியின் பலத்தை அதிகரிக்க இரு தரப்பும் முட்டி மோதி வருவதால், பலர் காட்டில் அடைமழையும் பெய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், என்ன தான் இப்போதைக்கு இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டாலும், அரசியல் எதிர்காலம் கருதி வேறு யோசனையிலும் இருந்து வருகின்றனர் சீனியர்கள்.

திமுக தீவிரம்
ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் போக்கு தொடர்வதால், லேசான அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக இறங்கியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில், திமுகவின் பலத்தைப் பெருக்குவதற்காக, கொங்கு மண்டல அதிமுகவினரை கட்சிக்குள் கொண்டு வருவதில் திமுக தலைமையும், கொங்கு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

கோவை புள்ளி
இந்நிலையில் தான், அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கியமான புள்ளி ஒருவர் திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டி வருவதாக தகவல் கசிந்து வருகிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்த நிர்வாகி, பத்திரிகையாளர் சந்திப்புகளில் எடப்பாடி பழனிசாமியை விளாசு விளாசென்று விளாசி வருபவர். தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றவர். ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கையானவராக கருதப்பட்டு வருகிறார்.

டேக் ஆஃப் ஆகாத பிளான்
ஆனாலும், ஓபிஎஸ் அணியில் இருப்பது தனது அரசியல் எதிர்காலத்திற்கு பெரிய பலன் அளிக்காது என அவர் கருதுகிறாராம். சில வாரங்களுக்கு முன், ஓபிஎஸ் பிரமாண்ட திட்டம் ஒன்றையும் தீட்டியிருந்தார். அதற்கான பொறுப்பும் இந்த முக்கிய புள்ளியிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பிளான் டேக் ஆஃப் ஆகவில்லை. ஓபிஎஸ்ஸுக்கு அங்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாததாலும், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறியதாலும் அந்த திட்டம் அப்படியே நின்று போனது.

தலைமையின் கண்ணசைவுக்கு
இந்நிலையில் தான், வெகுவாக யோசித்து, ஆளுங்கட்சிக்கு தாவும் முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திமுக தலைமைக்கு நம்பிக்கையான முக்கியமான பிரமுகரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிடமிருந்து முக்கிய பொறுப்புடன் எப்போது கண்ணசைவு கிடைத்தாலும் உடனே அவர் ஐக்கியமாகக் கூடும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

அறிக்கை - குண்டு
சமீபத்தில் கூட ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் புள்ளி, ஜெயலலிதா மரணத்திற்கு, எடப்பாடி பழனிசாமியும், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களும் தான் பொறுப்பு எனப் பேசியிருந்தார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஈபிஎஸ் பெயரே இல்லை என்பதும், ஓபிஎஸ் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருப்பதும் தெரிந்தே அந்தப் புள்ளி இவ்வாறு பேசியது ஓபிஎஸ் அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திமுக ஓகே
திமுகவுக்கு செல்ல அடிபோட்டு வரும் ஓபிஎஸ் அணியின் அந்த முக்கிய புள்ளி, தேசியக் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர், தற்போது விவாதங்கள், பிரஸ் மீட்டுகள் என பரபரப்பாக இருப்பவர் என்பதால், அவரை கொண்டு வருவது தங்களுக்கு கொங்கு மண்டலத்தில் கூடுதல் பலம் கொடுக்கும் என திமுக தலைமையும் கருதுகிறதாம். கட்சியில் சேர்த்து அவருக்கு என்ன பொறுப்பு கொடுப்பது பற்றி ஆலோசனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications