இதுக்கு பேரு ஓயாத அலைகள்-ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இடைவிடாமல் முதலிடத்தில் இருக்கும் #தமிழ்நாடு!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாட்டுக்கு எதிரான பேச்சைக் கண்டித்து சமூக வலைதளங்களில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து 2-வது நாளாக டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. #தமிழ்நாடு ஹேஷ்டேக்கில், ஆளுநர் என்.ரவிக்கு தமிழ்நாடு என்பதை முன்வைத்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என சொல்ல வேண்டும்.. இப்படித்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழ்நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழ்நாடு என்பது அரசியல் சொல் என்பதற்கு அப்பால் சங்க கால தமிழ் இலக்கியங்கள் தொடங்கி பயன்படுத்தப்படுகிற தமிழர் ஆளுமையின் வெளிப்பாட்டு சொல். தமிழ்நாடு என சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்ட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் 72 நாட்கள் பட்டினி போர் நடத்தி மாண்ட வரலாறு இங்கே உண்டு. தமிழ்நாடு - தனிநாடு என என்னால் பிரகடனம் செய்துவிட முடியும்; ஆனால் மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் மட்டும் சூட்டுகிறேன்.. தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என பேரறிஞர் அண்ணா முதல் இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை உணர்வுப்பூர்வமாக உச்சரிக்கும் சொல் தமிழ்நாடு. இதனை மாற்ற வேண்டும் என ஆளுநர் ரவி பேசியிருப்பதுதான் தமிழ்நாட்டின் கொந்தளிப்புக்கு காரணம்.

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைக் குவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் #தமிழ்நாடு ஹேஷ்டேக் நேற்று முதலே டிரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ்நாடு குறித்தும் தமிழ்நாட்டு மக்களின் பெருமிதம் குறித்தும் பேசிய வீடியோக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
லோக்சபாவில், தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜகவால் ஆளவே முடியாது என போர்முழக்கம் போல மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய வீடியோவும் இந்த ஹேஷ்டேக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை அடுக்கும் வீடியோ பதிவுகளும் ஏராளமான இந்த ஹேஷ்டெக்கில் உலா வருகின்றன.

மேலும் மகாராஷ்டிரம் என்றால் என்ன? இந்தியாவை விட பெரிய நாடு என்று பொருள். மகாராஷ்டிரத்தின் பெயரை முதலில் மாற்றச் சொல்லுங்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வரலாம் என்கிற திமுகவின் டிகேஸ் இளங்கோவனின் கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது.
"மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம். மொழியைக் காக்க உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழினம். மொழியை அறிவாலும், உணர்வாலும் காக்க வேண்டும்" என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய பேச்சும் இந்த ஹேஷ்டேக்கில் இடம்பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications