வாய்ப்பில்லை ராஜா! ‘தாமரை’ கட்சியை கண்டுக்காதீங்க.. ‘அவங்களுக்கும்’ இடமில்லை.. உறுதியாய் சொன்ன மாஜி!
சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலைக்கு வைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் தென்மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். காரணம், அங்குள்ள ஒரு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சு தான் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது என்கின்றன தகவல்கள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை முற்றாக அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாஜக தலைமை போலவே ஓ.பன்னீர்செல்வமும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அணிகள் இணைப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் தற்போதைக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

பாஜக தலைமை
ஓபிஎஸ் மட்டுமல்லாது சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோரை கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணிக்குள்ளோ கொண்டு வந்தால் அது மேலும் பலம் சேர்க்கும் என்பதாலும் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என அந்த கட்சி விரும்புகிறது. ஆனால் மூவரையும் சேர்த்துக் கொள்ள முடியவே முடியாது என நூறு சதவீதம் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவர்கள் மீண்டும் வர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை எனவும் கூறி இருக்கிறார். இதனால் பாஜக தலைமையை எதிர்கொள்ள தயாராகி விட்டார் எடப்பாடி என அடுத்தடுத்து யூகங்கள் பரவி வருகிறது.

மாஜி அமைச்சர்கள்
அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே ஆங்காங்கே சில முன்னால் அமைச்சர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வகையில் அதிமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கிறதா என செங்கோட்டையன் பாஜகவை மறைமுகமாக தாக்கினார். இதை தொடர்ந்து பேசிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜூவும் அதிமுக எக்ஸ்பிரஸை நம்பி ஏறினால் இறக்கி விடுவோம் இல்லை என்றால் அங்கேயே இருக்க வேண்டியது தான் என பாஜக குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
இதன் காரணமாக அனைத்து முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பின் அணிவகுக்க ஓபிஎஸ் பின்னால் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் பாஜக தலைமையை கண்டுகொள்ள வேண்டாம் தேர்தல் வேலையை நாம் தனியாகவே ஆரம்பிப்போம் என பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல முன்னால் வனத்துறை அமைச்சரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், இப்படி அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

இடம் கிடையாது
அதிமுகவில் ஒருபோதும் சசிகலா டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வத்துக்கு இடம் கிடையாது நம்மிடம் தான் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், 70 மாவட்டச் செயலாளர்கள், 2500க்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் இருக்கின்றனர், இவர்களை வைத்து அரசியல் செய்தாலே போதும். மேலும் பாஜக தலைமை பேசி வருவதை குறித்து எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது, இதனால் வடக்கு மாவட்டங்கள் கொங்கு மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் பாஜக எதிர்ப்பு தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி இருக்குமா?
இது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் பேச்சும் இதுவாகவே இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை பாஜக அதிமுக எடப்பாடி அணிக்கு கொடுத்து வரும் நிலையில் எடப்பாடி பாஜக கூட்டணியில் இருந்து விலக நினைக்கிறார். அதன் வெளிப்பாடாகவே மூத்த முன்னாள் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் பாஜகவை மறைமுகமாக பேசி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகவே செய்யும் என்கின்றனர் விவரம் அறிந்த மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications