"வாரிசு" விஜய்யின் உடை அலங்காரம்.. எதிர்ப்பு வந்தாலும் எதற்கும் கவலையில்லை.. ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: விஜய்யின் உடை குறித்து கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இந்த கருத்தை சொன்னதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வழக்கம் போல வாரிசு இசை வெளியீட்டிற்கு எளிமையாகவே விஜய் வந்திருந்தார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டின் போது மட்டும் வழக்கத்திற்கு மாறாக கோட்சூட் அணிந்து வந்தார்.
அந்த நிகழ்ச்சியில் கோட் சூட் குறித்து பேசிய விஜய், நம்ம நண்பர் அஜித் மாதிரி.. என கோட் சூட் அணிந்திருந்தது குறித்து பேசியிருந்தார். இதற்கு அரங்கமே அதிர்ந்தது. இந்த நிலையில் இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் எளிமையாக வந்தது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

வாரிசு விழா
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வாரிசு பட விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையை அணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர்கள் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபட்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

ஆடம்பர ஆடைகள்
நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை.

நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான் என்றும் கூறியுள்ளார். மேலும், முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் பேசியது என்ன
இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஜேம்ஸ் வசந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரை விமர்சித்து பொது வெளியில் என்னை தவிர தமிழகத்தில் வேறு யாரும் எழுத மாட்டாங்க என எனக்கு தெரியும். ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததால் நான் எழுதினேன்.

27 ஆண்டுகள் ஆயிற்று
இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை விமர்சித்தால் அவரது ரசிகர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என எனக்கு தெரியாதா என்ன? 27 ஆண்டுகளாக தமிழ் ஊடகத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு மூத்த ஊடகவியலாளராக எனக்கு ஒரு கடமை இருக்கிறது. எதிர்ப்புகளை பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications