திருமாவளவனோடு கரம் கோர்க்கும் ஜவாஹிருல்லா! அக்.2 சமூக நல்லிணக்கப் பேரணியில் மமக பங்கேற்பு!
சென்னை: அக்டோபர் 2ஆம் தேதியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் சமூக நல்லிணக்கப் பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் என அதன் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
மேலும், காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்.எஸ்.எஸ். அவரது பிறந்தநாளன்று பேரணி நடத்துவது உள்நோக்கம் மிக்கது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
நீங்கள் மனுதாரரே இல்லையே! ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக திருமா வழக்கு.. அவசரமாக விசாரிக்க மறுப்பு
உள்நோக்கம் உள்ளது
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50 இடங்களில் அணி வகுப்பு நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர். எஸ்.எஸ். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகும். சட்டமேதை அம்பேத்கரின் நினைவுநாளான டிச.6 ஐத் தேர்ந்தெடுத்து இவர்கள் பாபரி மஸ்ஜிதை இடித்ததும் குறிப்பிடத்தக்கது.
திருமா அழைப்பு
இத்தகைய வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலைத் தந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்க முயலும் சங்பரிவார்களின் சூழ்ச்சியைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் "சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி" நடைபெறும் என சிபிஎம். சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஜவாஹிருல்லா வரவேற்பு
இந்த மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கிறது.
சமூக நல்லிணக்கம்
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு சீரிய நடவடிக்கையாக அமைந்துள்ள இந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் திரளாக பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.