உறுப்பினர் பதவியே காலியாகிவிடும்.. உஷாரா இருங்க.. ஓபிஎஸ் தரப்புக்கு ஜெயக்குமார் அதிரடி வார்னிங்
சென்னை: கட்சியை எதிர்த்து வழக்கு போட்டால் உறுப்பினர் பதவியே காலியாகும் என்று அதிமுகவின் விதியில் உள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு போடும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார் ஜெயக்குமார்.
அதிமுகவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உட்கட்சி பூசல் அதிகரித்திருக்கிறது. சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிலர், ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தனர்.
சிறு பொறியாக ஆரம்பித்த அந்த விசயம் இப்போது பெரும் நெருப்பாக பற்றி எரிகிறது. அதிமுகவினர் ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு என இரண்டாக பிரிந்து பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பலத்தை நிரூபிக்க முயற்சி
இருந்தபோதிலும், அக்கட்சியின் பெரும் புள்ளிகள் இபிஎஸ் பக்கமே இருப்பதால், அங்கு பலம் கொஞ்சம் கூடியிருக்கிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கடிதத்திற்கு மதிப்பளிக்காத எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி வருகிற 23ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

8 நாட்களாக ஆலோசனை
ஓபிஎஸ், இபிஎஸ் இல்லங்களில் எட்டு நாட்களாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சந்தித்து பேசி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இன்றைய தினம், ஓபிஎஸ் கோதரர் ஓ.ராஜா சந்திப்பு நடத்தினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சலசலப்பை கிளப்பியுள்ளது.

ஜெயக்குமார்
ஒற்றைத்தலைமை என்பது ஒரு நல்ல விசயம் அதை வெளியில் சொன்னேன் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். கட்டாயம் அதை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். கட்சி கூட்டத்தில் நடந்தவைகளை அப்படியே வெளியில் சொன்னால்தான் அது தவறு. ஒற்றைத்தலைமை பற்றி இன்றைக்கு 99 சதவிகிதம் பேர் பேசுகின்றனர். இது வெளிப்படைத்தன்மைதான். கட்சியில் நடப்பது தொண்டர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நல்ல விசயம்
ஒற்றைத்தலைமை என்பது நல்ல விசயம். அதைத்தான் வெளியில் சொன்னேன் இதில் எந்த தவறும் கிடையாது. அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். இதில் அவரவர் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர். கட்சியின் உள் விவகாரங்களைத்தான் வெளியில் சொல்லக்கூடாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

வெளிப்படைத்தன்மை
இப்போது திரும்பவும் சொல்கிறேன்.. சத்தம் போட்டு சொல்வேன் ஒட்டுமொத்த தலைமைக்கழக நிர்வாகிகளின் கருத்து என்பது ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதுதான். அதைத்தான் எல்லோரும் வலியுறுத்துகின்றனர். இதுதான் வெளிப்படைத்தன்மை. அதை சாதாரண தொண்டர்கள் தெரிந்து கொள்வது தவறில்லை.

ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை அதிமுகவினர் சந்திக்கக் கூடாது. அதை அண்ணன் இபிஎஸ் கடைபிடிக்கிறார். யாரையும் சந்திக்கவில்லை. அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் புகழேந்தியை சந்தித்து பேசியது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்ட அவர், ஒருங்கிணைப்பாளரைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றார். இது ஒன்றும் பட்டா நிலம் அல்ல என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஓபிஎஸ்க்கு ஒரு சட்டமா?
ஒருங்கிணைப்பாளருக்கு சட்டதிட்டம் பொருந்தாதா என்றும் கேள்வி எழுப்பினார். எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிக்கை கொடுத்த பின்னர் சந்தித்தது ஏன்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம் சாதாரண தொண்டர்களுக்கு ஒரு சட்டமா என்று கேட்டார்.

கட்சிக்கு எதிராக வழக்கு
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறிய ஜெயக்குமார். கட்சி விதிகளின் படி நீதிமன்றத்திற்கே போகக்கூடாது. கட்சிக்கு எதிராக வழக்கு போட்டால் உறுப்பினர் பதவியே காலியாகும் என்ற விதியை ஜெயலலிதா வகுத்து வைத்திருக்கிறார் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications