ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கை நாளை தாக்கல்.. முதல்வரிடம் வழங்குகிறது ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆராய்ந்து விசாரணை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தனது விசாரணையை தற்போது இறுதி செய்துள்ளது.
நாளை காலை இந்த ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஏற்கெனவே சுமார் 14 முறை கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் தற்போது விசாரணை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்ட இந்த ஆணையம் முதன் முறையாக 2017 டிசம்பர் 24 ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு கால அவகாசம் கோரியது.
இலவசங்களுக்கு எதிரான வழக்கு-3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் உத்தரவு
மரணம்
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
விசாரணை ஆணையம்
அப்பல்லோ மருத்துவமனையில் யாரையும் அனுமதிக்காதது, அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் என பலவற்றிலும் மர்மம் தொடர்வதாக ஓபிஎஸ் 2017 பிப்ரவரியில் ஜெயலலிதா சமாதி அருகே தர்மயுத்தத்தை தொடங்கினார். இவர் தர்ம யுத்தத்தை தொடங்கிய நிலையில் ஜெ மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் அரசல் புரசலா பரவின. எனவே இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை
போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். ஜெயலலிதா உடன் இருந்த சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார்.
எய்ம்ஸ் மருத்துவக்குழு
பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த விசாரணைக்கு உதவிடும் வகையில் எய்ம்ஸ் மருத்துவக்குழுவை நியமித்து 2021 நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லையென கூறியது.
அறிக்கை தாக்கல்
ஆனாலும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்ந்து தனது அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசத்தை கோரியது. இதனையடுத்து ஆணையத்திற்கு 14வது முறையாக கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் நாளை (ஆக.27) ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்கிறது.