உருட்டு உருட்டு.. "இப்போ ரகசியம் எல்லாம் அங்கதான் இருக்கு” - ஜெயலலிதா பி.ஏ பூங்குன்றன் சொன்ன விஷயம்!
சென்னை : 'லவ் டுடே' படம் பற்றி ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பாராட்டி எழுதியுள்ளார். மனிதர்களின் இதயமாக மாறிப்போன செல்போனை வைத்து அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் என பூங்குன்றன் பாராட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' திரைப்படம் பற்றிய தனது பார்வையை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பூங்குன்றன்.

சுவாரஸ்யம்
இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், 'நேர் கொண்ட பார்வை', 'மாஸ்டர்' திரைப்படங்களுக்குப் பிறகு 'லவ் டுடே' படம் பார்த்தேன். சிறப்பாகவே செஞ்சு இருந்தார் இயக்குநர். மனிதர்களின் இதயமாக மாறிப்போன செல்போனை வைத்து அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். கதாநாயகனின் பாசமான அம்மாவாக ராதிகாவும், கதாநாயகியின் கண்டிப்பான அப்பாவாக சத்யராஜும் மனதை தொடுகிறார்கள். கதாநாயகனுடைய நண்பர்களின் எதார்த்தமான நடிப்பும், யோகி பாபுவின் வருகையும், அற்புதமான இசையும் சேர்ந்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.

ரகசியம்
கதாநாயகியின் தந்தை சத்யராஜ், மகளின் காதல் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், காதலன் செல்போனை காதலியும், காதலியின் செல்போனை காதலனும் ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். மறுநாள் வந்து, "நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம்" என்று சொன்னால், எனக்கும் 'ஓகே' என்று சொல்கிறார். இந்த செல்போன் பரிமாற்றத்தில் ஏற்படும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் தான் இந்த 'லவ் டுடே'. படத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது, சேரன் பாடிய 'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. அன்று ஒருவருடைய ரகசியம் மனதில் புதைந்திருந்தது. இன்று ஒருவரின் ரகசியம் செல்போனில் புதைந்து கிடக்கிறது.

பரபரப்பாக நகர்கிறது
அன்று அவர்களாகச் சொன்னால் தான் ரகசியம் தெரியவரும். இன்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய செல்போனைத் தட்டினால் போதும் ரகசியம் தெரிவதோடு, பலருக்கும் பரிமாறும் வசதி வேறு இலவசமாக இதில் இணைந்திருக்கிறது. இப்படி காதலன், காதலி இருவரும் யாருடன் பேசினார்கள். அவர்களுடைய 'X' யார்? 'Y' யார்? அவர்களுக்குள்ள தொடர்பு என்ன? வேறு என்ன? என்ன? இப்படி பரபரப்பாக நகர்கிறது இந்தக் காதல் கதை. கடைசியில், இருவருக்கும் இது தகுதியான காதல் அல்ல என்று மனம் வெதும்பும்போது, கதையை எப்படி முடிப்பார் என்ற ஆர்வம் எழ எழ.. அழகாகவே முடித்திருக்கிறார் இயக்குநர். காதலில் நம்பிக்கை வேண்டும்.

சுபம்
பெண்கள் பிடித்தால் மட்டுமே காதலிப்பார்கள், 'பிடிக்கவில்லை என்றால் கணவனைக் கூட சீண்டமாட்டாள் மனைவி' என்ற பொன்மொழிகளுக்கு ஏற்ப, ஒரு கட்டத்தில் காதலிக்கு அவப்பெயர் ஏற்படும் போது, அந்த களங்கத்தை துடைக்க காதலன் நடந்தவற்றை மறந்து தன்னையறியாமல் ஓடிச் செல்கிறார். களங்கத்தை துடைக்கிறார். ஒருவரின் காதலில் உண்மை இருந்தால் மட்டுமே! மற்றொருவரின் துயரத்தில் பங்கெடுக்க வைக்கும் என்ற உண்மையை உணர வைத்து, இருவரையும் சேர்த்து வைத்து கதைக்கு சுபம் போடுகிறார் இயக்குநர்.

நஷ்டம் உங்களுக்கே!
படம் முடிந்த பிறகு நண்பர்களின் உரையாடல்களை வைத்து, படத்தில் வரும் மாமா குட்டி, கண்ணுக்குட்டி, பன்னிக்குட்டி என்ற இந்த மூன்றோடு இன்றைய தமிழர்களின் ரசனை முடிந்து போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம், கணவனுக்கு தெரியாமல் அவருடைய செல்போனை மனைவியும், மனைவிக்கு தெரியாமல் அவளுடைய செல்போனை கணவனும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உசுப்பிவிட்டிருக்கிறது. அப்படி ஆர்வ மிகுதியால் பார்த்துவிடாதீர்கள்... பார்த்தால் நஷ்டம் உங்களுக்கே! உறவுக்குள் நம்பிக்கைத்தான் முக்கியம் என்பதையும் மறவாமல் சொல்லித் தந்திருக்கிறது இந்தப் படம்.

உருட்டு உருட்டு
இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட போது, அலுவலகத்தில் ஒரு செல்போனை தனியாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் சொன்னாரே! பார்க்கலாம். செல்போன், நம் நேரத்தைக் கொல்வதோடு, நம் உறவுகளையும் சிதைத்துவிடும் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கும் இயக்குநருக்கும்; மாமா குட்டிடீடீடீ.... உருட்டு உருட்டு... என்ற வசனத்திலும், நடிப்பிலும் அசத்தியிருக்கும் கதாநாயகனுக்கும் (பிரதீப் ரங்கநாதன்) என்னுடைய பாராட்டுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications