இப்படி செஞ்சா தான் அடுத்து கவனமா இருப்பாங்க.. கைதுக்கு எதிராக வரிந்துகட்டி இறங்கிய ஓபிஎஸ் மகன்!
சென்னை : சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதியா? சட்டம் ஒழுங்கில் பாரபட்சம் காட்டும் தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன் எனச் சீறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்துப் பேசி வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன், போன் வாயிலாக உதயகுமாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரவண பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் வீட்டைச் சூறையாடுவேன் என மிரட்டிய உதயகுமாரை விட்டுவிட்டு, அவருக்கு பதிலடி கொடுத்த தொண்டனை மட்டும் கைது செய்வதா என ஜெயபிரதீப் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறி மாறி கடுமையான விமர்சனம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கேபி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்ஸை கடந்த சில வாரங்களாக கடுமையாக விமர்சித்து வந்த ஆர்பி.உதயகுமாருக்கு போன் செய்து தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் என்பவர் மிரட்டல் விடுப்பதுபோல் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உதயகுமார் பேச்சு
ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமையேற்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மகேந்திரவாடி கூட்டுறவு சங்கத் தலைவரும், தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான சரவண பாண்டியன் என்பவர் போனில் மிரட்டல் விடுப்பதாக ஒரு ஆடியோ வெளியானது.

பாடை தயார்
அந்த ஆடியோவில், பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலுக்கு எப்போது வருவீர்கள் என உதயகுமாரிடம் கேட்ட அவர், ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறினீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது, தூக்கிச் செல்லவும் தயாராக இருக்கிறோம் எனப் பேசியிருந்தார் சரவண பாண்டியன். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் சரவண பாண்டியனை கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயபிரதீப் கண்டனம்
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளில் ஒரு சில அரசியல்வாதிகள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் சுயநலவாதிகளின் ஏவல்காரர்களாக மனசாட்சி இல்லாமல் பொது சபைகளில் மிக அநாகரீகமாக பேசி வருகிறார்கள். அதில் ஒருவர் சில சம்பவங்கள் நடைபெற்று விட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் வீட்டைச் சூறையாடுவேன் என்றும் சட்டத்திற்கு புறம்பாக பேசியிருக்கிறார்.

தவறு யார் மீது?
அதற்கு பதிலடியாக கழகத் தொண்டர் ஒருவர் நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் நாங்கள் பாடை கட்ட தயாராக இருக்கிறோம் என்று போனில் பேசியிருக்கிறார். இப்படி தக்க பதிலடி கொடுத்தால்தான் அடுத்து பேசுபவர்கள் வார்த்தைகளை கவனமாக உபயோகிப்பார்கள். இதில் முதல் தவறு எங்கு இருக்கிறது என்பதை மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

சாமானியனுக்கு ஒரு நீதியா?
ஆனால் தமிழக காவல்துறை கழக தொண்டனை மட்டும் கைது செய்து இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது, சட்டம் ஒழுங்கில் பாரபட்சம் காட்டும் தமிழக காவல்துறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். - இப்படிக்கு கழகத்தின் உண்மைத்தொண்டன் வி.ப.ஜெயபிரதீப்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications