ஜானகி ஒன்றும் தீண்டத்தகாதவர் அல்ல! சசிகலா தினகரன் வந்தால் நல்லா இருக்கும்! ஒரே போடாய் போட்ட ஜேசிடி!
சென்னை : ஜானகி ஒன்றும் தீண்டத்தகாதவர் இல்லை எனவும், சசிகலா, தினகரன் கட்சியில் இருந்தால் பலமாக இருக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்புவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இத்தனை நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்ததோடு, தனது ஆதரவையும் ஓபிஎஸ் தரப்புக்கு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு எனவும், கட்சியின் நலன் கருதி சசிகலா,டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்திப்பேன் எனவும் கூறியிருந்தார்.
ரவீந்திரநாத்.. திமுகவை புகழ்ந்தது சரியா.. ஓபிஎஸ் பிளான் இதுதான்.. ஜேசிடி பிரபாகர் என்ன சொல்கிறார்?
ஜே.சி.டி.பிரபாகர்
இந்நிலையில் சசிகலா, தினகரன் கட்சியில் இருந்தால் பலமாக இருக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்புவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு யார் காரணம் என்ற தகவலை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். போடி தொகுதியில் ஜானகி கட்சியில் தலைமை ஏஜண்டாக ஓ.பி.எஸ் இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது செய்தி. பொய்யான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்.
ஜானகி
ஜானகி ஒன்றும் தீண்டத்தகாதவர் இல்லை, இரட்டை இலை-க்காக தியாகம் செய்தவர் ஜானகி. எடப்பாடி பழனிசாமியின் சமீப கால பேச்சு கட்சியை ஒற்றுமைப்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓ.பி.எஸ்.-க்கு இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைகாட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறும் அளவிற்கு தான் எடப்பாடிக்கு தகவல் தெரியும்.
ஓபிஎஸ் தர்மயுத்தம்
யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்ல கூடாது என கூறிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார். தற்போது கட்சியின் ஒற்றுமைக்காகவும் ,வளர்ச்சிக்காக மட்டுமே ஓபிஎஸ் அனைவரையும் அரவணைத்து வருகிறார். ஒரு குடும்பத்திற்குள் கட்சி சென்று விட கூடாது என அன்று சொன்னோம். அதேபோல இப்போது கட்சி 5 பணக்காரர்களுக்குள் செல்ல கூடாது என தெரிவித்து வருகிறோம்.
கலவரத்திற்கு யார் காரணம்?
காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சியை வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ்.நம்புகிறார். எப்போது சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓபிஎஸ் தான் முடிவு செய்வார்" என தெரிவித்தார்.