445 இரண்டாவது அப்பீல் வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 445, இரண்டாவது மேல்முறையீட்டு வழக்குகளை 58 நாட்களில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஜி.ஆர்.சுவாமிநாதம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அக்கடிதத்தில் 2010-ம் ஆண்டு முதல் மொத்தம் 445 இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளை பிப்ரவரி 7-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரையிலான 58 நாட்களில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்தால் 58 நாட்களில் 445 வழக்குகளையும் முடித்துவிட முடியும் என கூறியுள்ளார்.
மேலும் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்க உள்ளது. ஆகையால் அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது மனுதாரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லை எனில் அவர்களது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் இருக்கின்றனரா? என்பதை கண்டறிய வேண்டும். இவ்வழக்குகள் அனைத்தும் சீனியாரிட்டி அடிப்படையில் அதாவது வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இவ்வழக்குகள் விசாரணையின் போது விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது. இவ்வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட 7-வது நாளில் அதன் நகல்கள் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் எனவும் அக்கடிதத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.