திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என கேட்ட செய்தியாளர்.. கே எஸ் அழகிரி சொன்ன பதில்!
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்காக திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுமா என செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு தமிழக காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று முன் தினம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரே அந்த 7 பேரையும் மன்னித்துவிட்டதாக ஏற்கெனவே கூறியுள்ள நிலையில் தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது முறையா என்ற கேள்வி எழுந்தது.

ஸ்ரீபெரும்புதூர்
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31-ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கே எஸ் அழகிரி
இதையடுத்து கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜீவ்காந்தி தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரர். இந்தியர்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்யத் தயாராக இருந்தவர். ராஜீவ்காந்தி இறந்தபோது கண்ணீர் ஆறாக போனது.

கொலையாளிகள் விடுதலை
தற்போது கொலையாளிகளை விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும்போது இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி என்பவர் குற்றவாளிதான், கடவுள் ஆக முடியாது என்றார்.

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் திமுக மற்றும் அதிமுகவினர் தான். ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவீர்களா என கே எஸ் அழகிரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பே எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் 7 பேர் விடுதலையை வலியுறுத்தினார்கள்.

கூட்டணி கட்சி
கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு தானே நாங்களும் கூட்டணி வைத்தோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்று பதிலளித்தார் கே.எஸ்.அழகிரி. பாஜகவும் காங்கிரஸுக்கு திராணி இருந்தால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என விமர்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications