இதுக்கு எப்படி சிரிக்கிறதுனே தெரியல.. வம்பு வளர்க்குறதுன்னே பண்றாரு ஆளுநர் ரவி.. கி.வீரமணி காட்டம்!
சென்னை : திட்டமிட்டு வம்பு வளர்ப்பதற்காகவே பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்துள்ளார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாது என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி. எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார் கி.வீரமணி.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை விமர்சித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வம்பு வளர்ப்பதற்காகவே ஆளுநர் இப்படிச் செயல்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆற்றிய உரை
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றதில் இருந்தே திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியானது என்று அண்மையில் ஆளுநர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை ஆளுநர் முன்னிலையிலேயே தெரியப்படுத்தி, ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்த நிலையில், ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பினார்.

அழைப்பிதழில் தமிழகம்
இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே இன்னொரு சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, பொங்கல் விழா அழைப்பிதழை தயார் செய்து வழங்கிய நிலையில் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் தற்போது இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஒன்றிய அரசு
இந்த சர்ச்சைகள் முடிவதற்குள் மீண்டும் தொடர்ந்து திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசி வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் மாளிகையில், 'எண்ணித் துணிக' எனும் தலைப்பில், இந்தியக் குடிமைப் பணிகள் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது, இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதில் எந்த குழப்பமும் இல்லை, ஆனால் இங்கு "ஒன்றிய அரசு" என்ற சொல் அரசியல் ஆக்கப்படுவதே பிரச்சனை. மத்திய அரசின் முக்கியத்துவத்தை குறைத்து விளையாடுவதால்தான் பிரச்சனை, 'யூனியன் கவர்மெண்ட்' எனப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆனால் தமிழில் 'ஒன்றிய அரசு' என மொழிபெயர்த்து பயன்படுத்துவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.

கி.வீரமணி அறிக்கை
இந்நிலையில், இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாது என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி. எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை. யூனியன் கவர்மென்ட் என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்மொழி பெயர்ப்பு 'ஒன்றிய அரசு' என்பதே! 'மத்திய அரசு' என்ற சொல், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பூர்வ சொல் அல்ல. ஆட்சிகளின் அதிகாரப் பகுப்புகளுக்கு மூன்று பட்டியல்களின் தலைப்பு என்ன? ஆளுநர் அரசியலமைப்புச் சட்ட வரலாற்றை புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.

வம்பு வளர்ப்பதற்காகவே
அரசமைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போது, மத்திய அரசு என்ற சொல்லுக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் போடவேண்டும். காரணம் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்றால் 'மத்திய அதிகாரக் குவிப்பு' என்ற பொருள் வந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்கவே 'ஒன்றிய அரசு' சொல்லாக்கம் இடம்பெற்றது. திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் ரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்துள்ளார்.

குறுக்குச்சால்
இவர் எங்கே கவர்னர்? தமிழ்நாட்டுக்குத்தானே. இவர் எந்த அரசின் நிதியிலிருந்து ஊதியம் வாங்குகிறார்? எங்கே குடியிருக்கிறார்? டெல்லியிலா? அதுமட்டுமா.. யூனியன் லிஸ்ட் ஒன்றிய அரசு பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது சென்ட்ரல் லிஸ்ட் என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும். ஒன்றியம் என்றால், அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் பஞ்சாயத்து யூனியன் என்ற சொல்லை நினைத்துக்கொண்டு பாடத்தைத் தவறாகச் சொல்லிக் கொடுத்து, இவரும் அது புரியாமல் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

பிரிவினை எண்ணம்?
இவர் இப்போது பிரச்சாரம் செய்யும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க கர்த்தாவான எம்.எஸ்.கோல் வால்கர் பஞ்ச் ஆப் தாக்ட்ஸ் நூலில் 'ஞானகங்கை' என்ற தலைப்பிட்டு, வெளியிடப்பட்டிருப்பதிலே ''ஒன்றிய அரசு'' என்ற சொல் முன்பே இடம்பெற்றுள்ளது. அதுவும் பிரிவினை எண்ணத்தோடுதானா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications