எஸ்கேப்.. சுற்றுலா போன "கலாஷேத்ரா" ஹரி பத்மன்.. அப்படியே தலைமறைவு.. தொடங்கிய போலீஸ் ஆபரேஷன்
சென்னை: விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவாகி உள்ளார்.
கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆசிரியர்கள் அங்கே இருக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. திருவான்மியூரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது.

என்ன நடக்கிறது
இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் உட்பட 4 பேர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும். நடன துறையின் தலைவர் ஜோஸ்லின் மேனன் தவறு செய்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

தவறு செய்தவர்கள்
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக புகார் கொடுத்த மாணவிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே மாணவிகள் இரவு முழுக்க போராட்டம் நடத்திய நிலையில் அதிகாலையில் பலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

எழுத்துப்பூர்வ புகார்
கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை இன்று கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவாகி உள்ளார். பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென தலைமறைவாகி உள்ளார். கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தார். கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார்.

தலைமறைவு
அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார் என காவல்துறை தகவல் வெளியிட்டு உள்ளனர். கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் இவர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக மாணவிகள் புகார்கள் அளித்தனர். இதை வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்தே ஹரி பத்மன் மீது புகார் வைக்கப்பட்டது.

புகார்
இந்த விவகாரத்தை விசிக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபையில் எழுப்பின. விசிக எஸ்.எஸ். பாலாஜி, தவாக தி. வேல்முருகன், காங்கிரஸ் கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் செய்தனர். இரண்டு இரவாக போராட்டம் செய்த போது அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இங்கே விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம் கூட முழுமையாக விசாரணை செய்யாமல் பாதியில் வெளியேறியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications