தூக்கியடிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.பி, கலெக்டர்.. புதிய எஸ்பி-யாக பகலவன் நியமனம்.. அரசு அதிரடி!
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே பள்ளியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பகலவன் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

வன்முறை
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடந்த நிலையில் நேற்று முன்தினம் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

கள்ளக்குறிச்சியில் 144
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்பட 67 போலீஸார் காயமடைந்தனர். இந்த வன்முறையில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. கள்ளக்குறிச்சி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுக் குழு
கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட எஸ்.பி. மாற்றம்
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
Recommended Video

ஆட்சியர் மாற்றம்
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications