சென்னை தீவுத் திடல் சத்தியவாணி முத்து நகர் பொதுமக்கள் வெளியேற்றம்- கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னை தீவுத் திடல் அருகே சத்தியவாணி முத்து நகரில் குடிசைகளை அகற்றி பொதுமக்களை வெளியேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் 2015-ல் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் ஓடுகிற அடையாறு மற்றும் கூவம் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையில் மட்டும் கூவம், அடையாறுகளின் ஓரங்களில் சுமார் 15,000 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை இடித்து விட்டு இங்கிருக்கும் மக்களை சென்னை புறநகர் பகுதிகளான கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை தீவுத் திடல் அருகே உள்ள சத்தியவாணி முத்து நகர் பகுதி வீடுகளும் இந்த நடவடிக்கையின் கீழ் அகற்றப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் தேர்வு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு சில குடும்பங்கள் மட்டும் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டன.
கூவத்தில் இறங்கி போராட்டம்
இந்நிலையில் இந்த குடியிருப்புகளையும் அகற்ற நேற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் கூவம் ஆற்றுக்குள் இறங்கி நின்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
வீடு இழந்து, கல்வி தடைப்பட்டு, வேலைவாய்ப்பினை இழந்து அல்லல் படும் சென்னை குடிசைவாழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையான சென்னை வட்டாரத்திற்குள்ளாகவே மாற்று வீடு கோரிக்கையாவது நிறைவேற்றுங்கள்? உங்கள் அரசால் துரத்தப்படுவது வெரும் மக்கள் மட்டும் அல்ல வாக்குகளையும் தான். pic.twitter.com/VCnwBFvlYN
— pa.ranjith (@beemji) December 9, 2020
இயக்குநர் ரஞ்சித் கருத்து
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: தமிழக முதல்வர் முதல்வர், துணை முதல்வர் அவர்களே! இந்த பெரும் மழைக்காலத்தில் தான் சென்னை சத்தியவாணி முத்து நகர் குடிசைப்பகுதி மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமா? வீடு இழந்து, கல்வி தடைப்பட்டு, வேலைவாய்ப்பினை இழந்து அல்லல் படும் சென்னை குடிசைவாழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையான சென்னை வட்டாரத்திற்குள்ளாகவே மாற்று வீடு கோரிக்கையாவது நிறைவேற்றுங்கள்? உங்கள் அரசால் துரத்தப்படுவது வெரும் மக்கள் மட்டும் அல்ல வாக்குகளையும் தான் என குமுறலை கொட்டியிருந்தார்.
|
இதுவா நலத்திட்டம்?
இதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் சத்தியவாணி முத்துநகர் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பொதுமக்கள் சொல்வது என்ன?
சத்தியவாணி நகரில் குடியிருக்கும் பொதுமக்கள், சென்னை புறநகர்களில் எங்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வியாசர்பாடி போன்ற இடங்களில் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.