சென்னை சங்கமம் ஒத்திகை! நாற்காலி இல்லையென்றால் பரவாயில்லை! எளிமையாக தரையில் அமர்ந்த கனிமொழி எம்.பி!
சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெற்ற நிலையில் அதை கண்டு ஆலோசனைகள் வழங்கச் சென்ற கனிமொழி எம்.பி. தனது எளிமையால் நாட்டுப்புற கலைஞர்களை வியக்க வைத்திருக்கிறார்.
நாற்காலிக்காக காத்திருக்காமல் எளிமையாக தரையில் அமர்ந்து சென்னை சங்கமம் ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்ததுடன், கலைஞர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் கனிமொழி நேரடியாக ஆய்வு செய்தார்.
இன்னும் சொல்லப் போனால் வரிசையில் நின்று நாட்டுப்புற கலைஞர்களுக்கு என்ன உணவு தரப்பட்டதோ அதையே தாமும் வாங்கி சாப்பிட்டுப் பார்த்தார்.

சென்னை சங்கமம்
நாட்டுப்புறக் கலை வடிவங்களை உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், சென்னையில் 'சென்னை சங்கமம்; நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் பிரமாண்ட கலை விழாக்கள் நடத்தப்படவுள்ளன. கனிமொழி எம்.பி. ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெறும் இந்த கலை விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

ஒத்திகை தீவிரம்
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பொறுத்தவரை சென்னையில் 16 இடங்களில் நடைபெறுகின்றன. இதற்கான தொடக்க விழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீவிரமாக ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 50 கலைக்குழுக்கள் சென்னையில் முகாமிட்டு ஒத்திகை பார்த்து வருகின்றனர். இதனிடையே சென்னை சங்கமம் கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கனிமொழி எம்.பி. இன்று ஒத்திகையை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

எளிமையாக தரையில்
அப்போது தாம் ஒரு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எந்த கர்வமும் இல்லாமல் மிகவும் எளிமையாக தரையில் அமர்ந்து ஒத்திகையை பார்வையிட்டார். அதுமட்டுமல்லாமல் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தரமான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா என்பதை நேரடியாக ஆய்வு செய்த பிறகே புறப்பட்டுச் சென்றார். இந்தளவுக்கு கண்ணும் கருத்துமாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை அவர் பார்ப்பதற்கு காரணம் எந்த சிறு குறையும், சர்ச்சையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான்.

கரகாட்டம் -காவடியாட்டம்
நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications