கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்! புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது!
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான கொடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவரான அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் தலைமையிலான கேரளா அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் 2015 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பதவி ஏற்றார். இந்த நிலையில் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த கொடியேறி பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.