என் கணவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.. ஆனா 7 நாட்கள் கழித்துதான் அவரை பார்க்க முடியும்.. குஷ்பு கவலை
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநரும் நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் வதைத்து வருகிறது. முதல் அலையில் தப்பியவர்கள் இந்த இரண்டாவது அலையின் கொடூர பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

மகள்கள்
இதையடுத்து அவரது மனைவி குஷ்பு, மகள்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என அறிக்கை வெளியானது. அது போல் குஷ்புவின் உறவினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா
இதையடுத்து சுந்தர் சி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் விரைவில் நலம் பெற ரசிகர்களும் முக்கிய பிரமுகர்களும் வாழ்த்தினர். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

குஷ்பு ட்வீட்
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குஷ்பு கூறுகையில் நண்பர்களே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் சுந்தர் சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி
எனினும் அவர் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் எங்களது கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொண்டிருக்கிறார். எனவே நான் எனது கணவரை 7 நாட்களுக்கு பிறகுதான் நேரில் பார்க்க முடியும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications