நூல் விலை கிடு கிடு! பாதாளத்தில் ஜவுளித்துறை! முதல்வர் இனி தாமதிக்கக்கூடாது! கொங்கு ஈஸ்வரன் யோசனை!
சென்னை: நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை மிகுந்த பாதிப்பு அடைந்து வருவதாகவும் இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அனுப்பி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை
மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;
நூல் விலை
நூல் விலை உயர்வினால் தொடர்ந்து ஜவுளித்துறை பாதிப்பு அடைந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக துணி உற்பத்தியாளர்கள் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கூலியை ஏற்றி வழங்கவும் முன்வரவில்லை. அதனால் தமிழகம் முழுவதும் விசைத்தறியாளர்கள் சார்பாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆயத்த ஆடைகள்
உயர்த்தப்பட்ட விலையில் நூலை வாங்கி ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகளை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் இயலாமல் தடுமாறுகிறார்கள். அதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியவில்லை. வேறு வழியில்லாமல் வாடிக்கையாளர்கள் வெளிநாடான பங்காளதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளில் வாங்க முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்.
கடிதம் எழுதி
இதன் காரணமாக இனிவரும் காலத்தில் மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை நான் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து இருக்கிறேன். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இரண்டு முறை விளக்கமாக கடிதம் எழுதி இருக்கிறார். தொழில்துறையின் சார்பாக தொடர்ந்து உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் மத்திய அரசு இதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.
அமெரிக்க டாலர்
இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி அளவு அதிகமானது போல ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. இதைப்போன்ற தரவுகளை வெளியிட்டு மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் இந்திய ஜவுளித்துறை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் தாமதிக்காமல் தமிழக முதலமைச்சர் மாநில ஜவுளித்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி மத்திய ஜவுளித் துறை அமைச்சரை சந்தித்து நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை காண வேண்டும்.