நிர்மலா சீதாராமன் நிறைய பேசி என்ன பயன்... பட்ஜெட் நிறைவாக இல்லை- கொங்கு ஈஸ்வரன்
சென்னை: மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். தடம்புரண்ட இந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது என்பது மட்டும் இந்த நிதிநிலை அறிக்கையில் புரிந்துக்கொள்ள முடிவதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.நிறைய பேசிய நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை நிறைவாக இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
எதிர்பார்ப்பில் இருந்த மொத்த இந்தியாவையும் ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை. நிதியமைச்சர் நிறைய பேசினார். ஆனால் நிதிநிலை அறிக்கை நிறைவாக இல்லை. வீழ்ந்து கொண்டிருக்கின்ற பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான எந்த முயற்சியும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தினுடைய உதவிகளை நாடி கையேந்தி நிற்க வேண்டுமென்று நிதியமைச்சர் விரும்புகிறார். இந்திய மக்களுடைய சேமிப்பு எண்ணம் தான் இதுவரை இந்தியாவை பொருளாதார ரீதியாக காப்பாற்றி வந்தது.
ஆதார் எண் இருக்கா.. இந்தா புடி பான் கார்டு.. விண்ணப்பமே தேவையில்லை.. பக்காவான 80 அறிவிப்புகள்!
முதல் முறையாக வருமான வரி விதிப்பு முறைகளை மாற்றி மக்களுக்கு சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வராதவாறு பார்த்து கொண்டிருக்கிறார்கள். சேமிப்பிற்கு கொடுத்து வந்த ஊக்கத்தை முழுமையாக நிராகரித்து இருக்கிறார்கள். நாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்க அடித்தளம் இடப்பட்டிருக்கிறது. நாட்டினுடைய மொத்த வருமானம் தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயருமென்று நிதியமைச்சர் கணக்கிட்டு இருக்கிறார்.
10 சதவீத வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பல்வேறு செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 10 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பே கிடையாது என்று பொருளாதார அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்களும் சொல்லிவிடுவார்கள். நிதி ஒதுக்கிய அறிவிப்பு எதையுமே செயல்படுத்த முடியாது. அதற்கான நிதி வராது. வளர்ச்சிக்கான எந்தவிதமான முயற்சியும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காமல் வளர்ச்சி அதிகமாகும் என்று கணித்திருப்பது மக்களை ஏமாற்றுகின்ற செயல். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.