நவம்பர் 24ஆம் தேதி பஞ்சாயத்து இருக்கு! ரூபி மனோகரனுக்கு சம்மன் அனுப்பிய கே.ஆர்.ராமசாமி! காங்.கலாட்டா!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரனை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கே.ஆர்.ராமசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.
ரூபி மனோகரன் தூண்டுதலின் பேரில் தான் சத்தியமூர்த்தி பவனில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி விடுத்துள்ள சம்மனில் கூறியிருப்பதாவது;

ராமசாமி சம்மன்
நடைபெறவுள்ள 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டம் நடைபெறுகிறபோது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டத் தலைவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முக்கிய தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வருவதை தடுத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.

விளக்கம் கொடுங்க
இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் நேரில் ஆஜராகி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுமான நிறுவன அதிபர்
ரூபி மனோகரனை பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக இருப்பதோடு ரூபி பில்டர்ஸ் என்ற பெயரில் சென்னையில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனிடையே கே.ஆர்.ராமசாமி அனுப்பியுள்ள சம்மனை ஏற்று ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ரூபி மனோகரன் விசாரணைக்கு ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications