கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகல கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் பக்தர்கள் வழிபாடு
சென்னை: நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விடிய விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடல் பாடலுடன் ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக பகவான் கிருஷ்ணரை வழிபட்டனர்.
பகவான் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் கிருஷ்ணர் அவதாரம் சிறப்பு வாய்ந்தது. தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே அவரை அழிக்க காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன். அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது.
உலகத்தில் அதர்மம் எப்பொழுதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் மண்ணுலகில் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் அஷ்டமி திதி
திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த இரண்டு திதிகளுமே வழிபாட்டிற்கு உரிய திதிகளாக மாற்றி விட்டார் மகாவிஷ்ணு. ஒருத்தி மகனாய் பிறந்து இன்னொருத்தியின் மகனாக வளர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர். பிறந்தது சிறையாக இருந்தாலும் வளர்ந்தது அன்னை யசோதாவின் மடியில்தான். பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்றும் இன்றும் இரண்டு தினங்கள் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

குழந்தை கண்ணனுக்கு படையல்
கண்ணன் குழந்தையாக அவதரித்த பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில், பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், வெண்ணெய் சர்க்கரை கலந்த நெய்வேதியங்களை படைக்க வேண்டும். மேலும், வெல்லச்சீடை, உப்புச் சீடை, கை முறுக்கு, அவல் லட்டு, தேன்குழல், திரட்டுப்பால் என குழந்தைகளுக்கு விருப்பமான தின்பண்டகள் படைக்கப்படுகின்றது.

கோலாகல கொண்டாட்டம்
வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் பக்தர்கள் விடிய விடிய வழிபட்டனர். ஆடல், பாடலுடன் உற்சாகமாக பக்தர்கள் கண்ணனை ஆராதனை செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசுத்தலைவர் வாழ்த்து
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,இந்த மங்கலகரமான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ண பகவானின் வாழ்க்கை, போதனைகளும் நல்வாழ்வு மற்றும் நல்லொழுக்கத்தை உள்ளடக்கியது. அவர் சுயநலமில்லாத கடமை குறித்த கருத்தை பரப்பினார். தர்ம வழியின் மூலம் இறுதி நிலையை அடைவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த பண்டிகை நம் எண்ணம், வார்த்தைகள் மற்றும் செயல்பாடு நல்லொழுக்க பாதையில் செல்ல நம்மை ஊக்குவிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்
குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அதர்மத்தை அழித்து தர்தமத்தை நிலைநாட்டும் நம்பிக்கையை இது உறுதி செய்கிறது. கிருஷ்ணர் தெய்வீக அன்பு, உயர்ந்த அழகு மற்றும் நித்திய ஆனந்தம் ஆகியவற்றின் உருவகம். பகவத் கீதையில் அவரது காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த உத்வேகத்தை அளித்துள்ளன. நமது வாழ்க்கையில் இது அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என்று அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications