எங்க வீட்டு கரண்ட் பில் முதலில் ரூ.3,000 வந்தது.. இப்போ ரூ.10,000 வருது! நொந்து கொண்ட எல்.முருகன்!
சென்னை: தங்கள் வீட்டு மின் கட்டணம் முதலில் ரூ.3,000க்குள் வந்ததாகவும் இப்போது ரூ.10,000 வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நொந்து போய் கூறியிருக்கிறார்.
மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் பேரிடியை தமிழக அரசு இறக்கியுள்ளதாகவும் 40 முதல் 50 மடங்கு மின் கட்டணம் உயர்வு இருப்பதாகவும் சாதாரணமாக ரூ.300 மின் கட்டணம் வந்த வீடுகளுக்கு இப்போது ரூ.3,000 வருவதாகவும் எல்.முருகன் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொழில் நிறுவனங்கள் எல்லாம் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறிய எல்.முருகன், மின்சார வாரியம் மீது இன்னும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக அடுக்கியுள்ளார். இதனிடையே மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் இரங்கலும் தெரிவித்த எல்.முருகன், சங்கரய்யாவுக்கு மண்மண்டபம் கட்டப்பட வேண்டும் என்றும் அப்படி கட்டப்படுமானால் மகிழ்ச்சியுறும் முதல் நபர் தாம் தான் எனவும் தெரிவித்தார்.
சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனால் உறுதியான பதிலை சொல்ல முடியவில்லை. விருது என்பது பெரிய நடைமுறை என்றும் சங்கரய்யாவின் குடும்பத்தினர் அதற்கான முயற்சிகளை எடுத்தால் அப்போது தானும் அந்த முயற்சியை அவர்களோடு சேர்ந்து முன்னெடுப்பேன் என கூறிவிட்டு நழுவிக்கொண்டார்.
சங்கரய்யாவின் சமூக பங்களிப்பு என்பது மிகப் பெரியது என எல்.முருகன் புகழாரம் சூட்டினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனால் இப்படி புகழாரம் சூட்டப்பட்ட சங்கரய்யாவுக்கு தான் ஆளுநர் ரவி கடைசி வரை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதலே வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரய்யாவை பொறுத்தவரை 1961ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக காரணமாக இருந்த தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் 32 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பேர்பட்ட தலைவருக்கு அவர் வாழும் காலத்திலேயே டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை என்பது பாஜகவுக்கு பழிச்சொல்லாக அமைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications