தனுஷ்- ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்க.. பறந்து வந்த கோரிக்கை.. லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பதில்!
சென்னை: தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வையுங்கள் என நெட்டிசன் ஒருவரின் கோரிக்கைக்கு சமூக ஆர்வலரும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 18 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக கணவன் மனைவியாக பெற்றோர்களாக ஒன்றாக பயணித்தோம்.
இந்த பயணத்தில் புரிதலுடன் இருந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால் இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களை புரிந்து கொண்டு இருவரும் மீண்டு வருவதற்கான நேர அவகாசத்தை எங்களுக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2 வார பேச்சுவார்த்தை.. சமாதானத்திற்கு முயன்ற ரஜினிகாந்த்? தனியாக தங்கிய தனுஷ்? நடந்தது என்ன?
ஏன் பிரிவினை
எங்களது முடிவை ஏற்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களது இந்த முடிவு ரஜினிகாந்த் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என காரணத்தை ஆராயாமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
பஞ்சாயத்துக்கு போன நெட்டிசன்
இந்த நிலையில் தனுஷின் ட்வீட்டை நெட்டிசன் ஒருவர் ரீட்வீட் செய்து அதை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்து அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன், இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இரண்டு பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வையுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில் இருவரும் கண்ணியமான முறையில் பிரிகிறார்கள். ஒருவருக்கொருவர் பிரச்சினையை ஏற்படுத்தாமல் அசிங்கமாக திட்டிக் கொள்ளாமல் முறைபடி விவாகரத்து பெறும் முன் யாரையும் காதலிக்காமல் மன உளைச்சல் கொடுக்காமல் பிரிகிறார்கள். அவர்களை தனியாக விட்டுவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
எதற்கு இத்தனை விளம்பரம்?
அதற்கு அந்த நெட்டிசன், நான் அவர்களது முடிவை மதிக்கிறேன். இது அவர்களது சொந்த விவகாரம் எனும் போது அவர்களாக அமைதியாக பிரிந்து சென்றிருக்கலாம். எதற்காக இதையெல்லாம் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் விவாகரத்து மிகவும் அரிதாக நடைபெறும். ஆனால் இன்று பிரபலங்களால் விவாகரத்துகள் வழக்கமாக நடைபெறும் விஷயமாகிவிட்டது என்றார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்
இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில் பிரச்சினை என்னவெனில், அவர்களது பிரிவை அவர்கள் அறிவிக்காவிட்டால் அவர்களது அனுமதி இல்லாமல் தேவையற்ற செய்திகள் பரப்பப்படும். தவறான தகவல்களும் வைரலாக்கப்படும். ஆனாலும் அழகாக கண்ணியமாக சமந்தா விவாகரத்து குறித்து அறிவிக்கப்பட்டும் அவர் மிக கொடூரமான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.