முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.. புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல்?
சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. மே 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்பதால், இந்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்.17ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதேபோல் துணை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல்
இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. அந்த மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது. அதன்பின்னர் அந்த சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைகள் தாக்கல்?
ஜெயலலிதா மரணம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இறுதி அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்து இருந்தது. 2017ம் ஆண்டும் செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்குப் பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அறிக்கைகளும் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications