கட்டுப்பாட்டை தளர்த்தியதால் வந்த வினை.. சென்னையில் நோய் பரவலுக்கு இதுதான் காரணம்.. ராமதாஸ் ஆதங்கம்
டாக்டர் ராமதாஸ் உருக்கமான வேண்டுகோள் விடுத்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "சென்னை மாநகர மக்கள் மிக மிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளா விட்டால் நான்காம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. சென்னை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அடுத்த 15 நாட்களுக்கு உங்களை நீங்களே வீடுகளில் அடைத்துக் கொள்ள வேண்டும்!" என்று டாக்டர் ராமதாஸ் மிகுந்த அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.
ஊரடங்கு தளர்த்தல் என்ற பேச்சே கூடாது என்று பாமக ஆரம்பத்தில் இருந்தே கதறி வேண்டுகோளை வைத்து வருகிறது.. குறிப்பாக டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் இந்த தொற்று பரவல் குறித்த எச்சரிக்கையை விடுத்து கொண்டே இருக்கிறார்கள்.
ஓயாமல் மக்களுக்கு அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார்கள். முக்கியமாக தமிழக அரசுக்கும் மிக முக்கிய ஆலோசனைகளையும், உத்திகளையும் தந்து வருகிறார்கள்.. எனினும் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது.. குறிப்பாக தலைநகரம் மிரட்டி கொண்டிருக்கிறது.
யாரெல்லாம் கோயம்பேடுக்கு சென்று வந்தீர்கள்.. உடனே டெஸ்ட் எடுத்தாகணும்.. அன்புமணி அதிரடி அறிக்கை
பாதிப்பு
இந்த நேரத்தில் ஊரடங்கு தளர்வு என்ற பேச்சும் எழுந்து வருகிறது... ஒரு பக்கம் ஊரடங்கு தளர்வு இன்னொரு பக்கம் சென்னையில் தொற்று பாதிப்பு அதிகம் என்ற செய்திகள் வரவும் டாக்டர் ராமதாஸ் கொந்தளித்து விட்டார்.. சென்னையை முக்கியமாக கோயம்பேட்டை மையமாக வைத்து அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு கடுமையாக அலர்ட் செய்திருக்கிறார்.
தளர்வுகள்
"சென்னையில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், நோய்ப்பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு கூடுதல் கட்டுப்பாட்டுடன் வீடு அடங்கி இருக்க வேண்டும்; அரசும் பல மடங்கு கடுமையாக ஊரடங்கை செயல்படுத்த வேண்டும்! "சென்னை மாநகர மக்கள் மிக மிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளா விட்டால் நான்காம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. சென்னை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அடுத்த 15 நாட்களுக்கு உங்களை நீங்களே வீடுகளில் அடைத்துக் கொள்ள வேண்டும்!" என்று மிகுந்த அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.
கோயம்பேடு
"சென்னை கோயம்பேடு சந்தை புதிய கொரோனா பரவல் மையமாக உருவெடுத்துள்ளது. கோயம்பேட்டில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 7 பேருக்கும், அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன". "சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று, சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்து காய்கறி வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை தேடி கொரோனா ஆய்வு செய்ய வேண்டும்!"
ஆய்வுகள்
"கோயம்பேடு சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் மூலம் நோய்ப் பரவக் கூடும் என்பதால், கோயம்பேடு சென்று வந்தவர்களுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்பட வேண்டும்!" என்று தன்னுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கையையும் சேர்த்து ட்வீட்களாக பதிவிட்டுள்ளார்.
ராமதாஸ் ட்வீட்
ராமதாஸின் இந்த ட்வீட்களுக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. ஒரு டாக்டரா இந்த கொரானாவின் கொடிய முகம் தெரிந்து சொல்கிறீர்கள்.. but இந்த கம்யூனிஸ்ட்களும், திமுகழகமும், கமலும் மெத்த படித்தவர்கள் மாதிரி கூவுறாங்க" என்று தெறித்து விழுகின்றன கமெண்ட்கள். அதே சமயம், "மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க தயார்.. அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அருகில் உள்ள மாநிலமா கொடுப்பார்கள்", "உயிா் வாழ்வது முக்கியமா? பொருளாதாரம் முக்கியமா? அதெல்லாம் சரி சோறு யாரு தருவா?" என்ற கேள்விகளும் டாக்டரை பார்த்து எழுப்பி வருகிறார்கள்!