அடுத்த 2 வாரம் ரொம்ப முக்கியம்.. கவனமா இருங்க.. தமிழ்நாடு அரசு தந்த எச்சரிக்கை.. என்ன காரணம்?
சென்னை: கொரோனா பரவலில் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது தினமும் 23 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாக தொடங்கி உள்ளன. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,18,017 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மூன்றாம் அலை வேகம் எடுத்துள்ளது உறுதியாகி இருக்கிறது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தளர்வுகளுடன் லாக்டவுன்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இருப்பினும் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28,91,959 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கணக்குப்படி தமிழ்நாட்டில் இதுவரை 231 பேர் ஓமிக்ரான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தளர்வுகளை பயன்படுத்தி அதிக அளவில் வெளியே செல்வது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தமிழ்நாடு கொரோனா
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் சரியாக கடைபிடிக்காமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த நிலையில்தான் கொரோனா பரவலில் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. இது போன்ற நேரத்தில் மக்கள் அதிகம் வெளியே செல்வதை குறைக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இது போன்ற சமயங்களில்தான் அதிகம் தேவைப்படுகிறது.

ஓமிக்ரான் தமிழ்நாடு
ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவி வருகிறது.இப்படிபட்ட நேரத்தில் ஓமிக்ரான் கேஸ்களால் பாதிப்பு இல்லை என்று மக்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது. அடுத்த இரண்டு வாரம் முக்கியமானது. இந்த இரண்டு வாரத்தில் கேஸ்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. அங்கு தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

மாஸ்க்
மக்கள் மாஸ்க் தவறாமல் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி விட வேண்டும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. தமிழ்நாட்டில் பதிவாகும் கேஸ்களில் 10-15 % கேஸ்கள் டெல்டா கேஸ்கள். தமிழ்நாட்டில் 7 சதவிகிதம் கொரோனா பாதித்து மருத்துவமனையில் உள்ளனர். மக்கள் கவனமாக இருக்கும்பட்சத்தில் இந்த பரவலில் இருந்து நாம் வேகமாக விடுபட முடியும் என்று, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications