சினிமாவா? அரசியலா? கமல் எடுத்த அதிரடி முடிவு.. வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு.. பின்னணியில் திமுக
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு ஏற்படாத நிலையில் கமல்ஹாசன் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் தான் அரசியலா? சினிமாவா? என்ற சூழலில் கமல்ஹாசன் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் மீண்டும் கடந்த ஆண்டு அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் அவர் நெருக்கம் காட்டினார். டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் ‛பாரத் ஜோடோ யாத்திரையில்' கமல்ஹாசன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர் காங்கிரஸ் வழியாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் நுழைய திட்டமிட்டுள்ளதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணைய விரும்புகிறார். திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு வரும் தேர்தலில் 2 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்டு பெற கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். கோவை உள்பட 2 தொகுதிகளை அவர் கேட்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக மற்றும் கமல்ஹாசன் இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து நேரடியாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பற்றி பேசி வரும் நிலையில் கமல்ஹாசனிடம் மட்டும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு அவரிடம் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இப்போது வரை மக்கள் நீதி மய்யம் - திமுக இடையேயான கூட்டணி என்பது இறுதியாகவில்லை. பிப்ரவரி இறுதிக்குள் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என கமல்ஹாசன் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று இரவு ‛Thug Life' படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு புறப்பட வேண்டி உள்ளது. ஆனால் கூட்டணி இறுதியாகாத நிலையில் கமல்ஹாசன் தனது வெளிநாட்டு பயணத்தை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் திமுக உடனான தொகுதி பங்கீட்டை உறுதி செய்துவிட்டு‛Thug Life' படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு முழுவீச்சில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications