செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
Recommended Video
சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாருமே யூகிக்க முடியாத ஒரு அதிரடி திருப்பம் தமிழக அரசியலில் நடந்தேறியுள்ளது.
அதிமுக-திமுகவுக்கு மாற்று சக்தியாக உருவெடுப்பார், அல்லது அதிமுக வாக்கு வங்கியை, மொத்தமாக தன் பக்கம் கொண்டு வந்து நிலைநிறுத்துவார் என்றெல்லாம் சொல்லப்பட்ட, கணிக்கப்பட்ட, அம்மா மக்கள் முன்னேற்ற கழக, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அரசியலுக்கு பெரும் அடி விழுந்துள்ளது.
இந்த லோக்சபா தேர்தலில், தினகரன், கட்சிதான் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று அனைத்து அரசியல் பண்டிதர்களும் கணித்தனர்.

புஸ்வானம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற, ஆர்கே நகர் இடைத் தேர்தலில், அமோக வெற்றி பெற்று, திமுகவை டெபாசிட் இழக்க வைத்ததோடு, அதிமுகவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி, ஜெயலலிதாவின் வாரிசு போல தன்னை வெளிக்காட்டியவர் தினகரன். எனவே, இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு அவர் சிம்ம சொப்பனமாக மாறுவார் என்றனர். ஆனால் தேர்தல் முடிவுகளோ அவர் புஸ்வானமாகிவிட்டதைத்தான் காட்டுகின்றன.

டெபாசிட் கேள்விக்குறி
திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர், சாருபாலா தொண்டைமான் தவிர்த்து பிற லோக்சபா தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டெபாசிட் வாங்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நான்கு இலக்க எண்களில் கூட ஓட்டு வாங்க முடியாத அளவுக்கு தான் சில தொகுதிகளில் ஓட்டுகளை பெற்றுள்ளது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். 600, 700 இப்படித்தான் அந்த வேட்பாளர்கள் ஓட்டு பெற்றுள்ளனர்.

திருப்பம்
மக்கள் நீதி மையம், நாம்தமிழர் ஆகிய கட்சிகளுக்கு பின்னால்தான், பல்வேறு தொகுதிகளிலும் தள்ளப்பட்டுவிட்டது தினகரனின் கட்சி. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஒருவரால், பொதுத்தேர்தலில் அந்த வெற்றியில் ஒரு சதவீதத்தை கூட அறுவடை செய்ய முடியாமல் போனது கண்டிப்பாக தமிழக அரசியல் களத்தின் ஆகப் பெரும் திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எடப்பாடிக்கே நல்லது
தினகரனை நம்பி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு செயல்பட்டு, சபாநாயகரால், தகுதி நீக்கத்துக்கு உள்ளான எம்எல்ஏக்களும் கூட இடைத்தேர்தலில் படு தோல்வியை நோக்கி சென்று கொண்டு உள்ளனர். அவர்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த தேர்தலின் மூலம் தினகரன் தரப்பு உடைந்து, அதிமுக பக்கம் பலரும் திரும்பும் வாய்ப்பு உருவாகி, அது எடப்பாடி பழனிச்சாமி கரத்தை மேலும் வலுப்படுத்த உதவி செய்யப் போகிறது.

கண்டிப்பாக ட்விஸ்ட்
இனிமேலும் அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் நினைக்க முடியாதபடி, இந்த தேர்தல் ஒரு படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளது. எனவே இனிமேல் அவர்கள் அரசுடன் அனுசரித்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் அதிமுகவின் வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன், அதிமுக வலிமையாவதற்கு, மறைமுகமாக உதவி செய்துள்ளார். இது கண்டிப்பாக தமிழக அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனை.












Click it and Unblock the Notifications