"கழிசடையா! இது ரொம்ப தப்பு.." சர்ச்சையான குருமூர்த்தி பேச்சு.. உடனடியாக பறந்த சு வெங்கடேசன் கடிதம்
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் வங்கி ஊழியர்கள் குறித்த குருமூர்த்தியின் கருத்துகள் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக மதுரை எம்பி சு வெங்கடேசன் நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு
இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திமுகவைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், வங்கி ஊழியர்கள் குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
சு வெங்கடேசன் கடிதம்
இதனிடையே வாங்கி ஊழியர்கள் பற்றிய குருமூர்த்தியின் கருத்துகளைக் கடுமையாகக் கண்டித்துள்ள மதுரை எம்பி சு வெங்கடேசன், இது குறித்து நிதியமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "துக்ளக் விழாவில் உங்கள் முன்னிலையில் பேசிய அந்த இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியின் சில மோசமான கருத்துகள் குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கழிசடைகள்
அந்த விழாவில் குருமூர்த்தி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை "கழிசடைகள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு "உதிர்ந்த ரோமத்தைப் போன்ற நபர்கள் அல்லது பொருட்கள்" என்று பொருளாகும். உங்கள் முன்னிலையில் அவர் இதுபோல பேசியுள்ளார் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவரது இந்த கருத்து நாடு முழுவதும் பணியாற்றும் லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் காயப்படுத்தும் வகையில் உள்ளது.
குற்றப்பத்திரிக்கை
மத்திய விஜலென்ஸ் அமைப்புகள் குறித்தும் அர்த்தமற்ற சில கருத்துகளை அவர் தெரிவித்தார். இதுபோன்ற அமைப்புகளை நீக்க பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் அரசின் பங்குகளை 51%இல் இருந்து 49%க்கு குறைப்பதே வழி என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் நிதி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து மக்கள் செய்திகள் மூலம் அறிவார்கள். ஒரு பிரபல தனியார் வங்கியில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையே உண்மையை விளக்கும் வகையில் உள்ளது.
கண்டிக்க வேண்டும்
குருமூர்த்தியின் இந்த பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு அவர்கள் முன்னிலையில் இப்படி அநாகரிகமாகப் பேசி இருக்கிறார். மேலும் வங்கி ஊழியர்கள் உங்களின் கீழ் பணியாற்றுபவர்கள். கொரோனா காலத்தில் அளப்பரிய பணியைப் பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொண்டு இருந்தார்கள். நீங்கள் கூட இதை குறிப்பிட்டுப் பாராட்டி இருந்தீர்கள்.
அநாகரிகமான வார்த்தைகள்
நிதி அமைச்சர் குருமூர்த்தியின் அநாகரிகமான வார்த்தைகள் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குருமூர்த்தி உட்பட அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எந்தவொரு தொழிலாளர்களின் கவுரவத்தையும் பாதிக்கும் வகையில் பொறுப்பற்ற பேச்சுக்களை இனி பொது நிகழ்ச்சிகளில் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்