ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்’!பரபர
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 30ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக தகவல் பரவியது.
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், ‛‛ஜனவரி 30ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக பதிவிடப்பட்டு இருந்தது'' அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான தகவல்களை இடம்பெற செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். இவர் அரசியலில் கால்பதித்தார். மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கமல்ஹாசன் துவக்கினார். கடந்த 2018 ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சி உதயமானது.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கடந்த 2021 சட்டசபை தேர்தல்களை சந்தித்தார்.
இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் வெற்றியை பதிவு செய்யவில்லை.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தினாலும் அவர் தோல்வியை சந்தித்தார். கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்யவில்லை.

காங்கிரசுடன் கமல் நெருக்கம்
இந்நிலையில் தான் தற்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் ராகுல் காந்தியுடன் அவர் கலந்துரையாடினார். காங்கிரஸ் மூலம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரலாம் என்ற தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் மக்கள் நீதி மய்யம் அவருக்கு ஆதரவு வழங்கி உள்ளது.

காங்கிரஸில் இணைப்பதாக தகவல்
இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இன்று ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது. அதில், ஜனவரி 30ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக பதிவிடப்பட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் தற்போது நெருக்கம் காட்டும் நிலையில் இது உண்மை என்ற தகவலும் பரவ தொடங்கியது. மேலும் இது விவாதத்தை கிளப்பியது. இதற்கிடையே இந்த தகவலை கட்சி நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்தனர்.

ஹேக் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம்
இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் சார்பில் இணையதள பக்கத்தில் இருந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‛‛மக்கள் நீதி மய்யத்தை காங்கிரசுடன் இணைப்பு என்பது தவறான தகவல். மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றனர்.

தக்க பதிலடி கொடுப்போம்
இதுபற்றி மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளது. அதில், ‛‛ மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications