"2வது மனைவி.." எழும்பூர் வந்த ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்
சென்னை: நேற்றிரவு(டிச.27) கேரளாவின் குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதன் பின்னணி காரணம் போலீசாரையே தூக்கிவாரிப்போட்டது.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்மநபர் ஒருவர் போன் செய்திருந்தார். அதில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதனையடுத்து அலர்ட் ஆன காவல்துறையினர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே உடனடியாக ரயிலை செங்கல்பட்டில் நிறுத்தி சோதனை செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால், ரயில் அதற்குள் செங்கல்பட்டை விட்டு புறப்பட்டுவிட்டது. எனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் டயானாவுடன் காத்திருந்தனர். ரயில் வந்ததையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சோதனையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இது வதந்தி என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் யார் போன் செய்தது என்பது குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள தொடங்கினர்.
எடப்பாடியை மிரட்டும் சிவி சண்முகம்? தேஜஸ் ரயிலில் நடந்தது என்ன? என்ன ஓபிஎஸ் கேம்ப் இப்படி சொல்லுதே?
மிரட்டல்
விசாரணையை தொடங்கிய தனிப்படை முதலில் செல்போன் எண்ணை கொண்டு முகவரியை கண்டு பிடித்தது. பின்னர் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் வேளச்சேரியை சேர்ந்த சதீஷ் பாபு என்பவர்தான் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து இந்த புரளியை கிளப்பி இருக்கிறார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டார். மேலதிக விசாரணையில் சதீஷ் பாபு சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழிவாங்க திட்டம்
இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் இவருடைய நிலையை கண்டு முதல் மனைவி பிரிந்து சென்றுள்ளார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருடனும் தொடர்ந்து சண்டை நீடித்திருக்கிறது. எனவே இரண்டாவது மனைவி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அதன் பின்னர் சதீஷ் போய் சமாதானம் பேசி அழைத்த வந்திருக்கிறார். இப்படி அடிக்கடி சண்டை நடப்பதும் மனைவி கோவித்துக்கொண்டு சென்றுவிடுவதும் தொடர்கதையாகியுள்ளது. ஆனால் நேற்று நடந்த சண்டையில் மனைவி இவரை கடுமையாக திட்டியுள்ளார். மட்டுமல்லாது தன்னை இனி வந்து அழைக்க வேண்டாம் என்றும் அப்படி அழைத்தாலும் வரமாட்டேன் என்றும் கறாராக கூறியுள்ளார்.
விடுவிப்பு
இதனையடுத்து இவரை பழி வாங்க வேண்டும் என்று நினைத்த சதீஷ் நன்றாக குடித்துவிட்டு வந்து மனைவியின் செல்போனிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காவல்துறையினர் விசாரணையில் தற்போது இவர் மாட்டிக்கொண்டார். ஆனால் சதீஷ் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்த பின்னர் அவரை காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர். தொடர் விடுமுறை காரணமாக ரயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் நிலையில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறப்பு ரயில்கள்
அதேபோல எதிர் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 13ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறது. இது அடுத்தநாள் காலை 7.10க்கு நாகர்கோவில் சென்று சேரும். இதேபோல தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.