மாண்டஸ் புயல்.. அரசை குறை சொல்ல முடியாது! அமைச்சர்கள் களத்தில் இறங்குனாங்க - அண்ணாமலையே சொல்லிட்டாரே
சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள் என்றும், அரசை இதில் குறை கூற முடியாது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே நள்ளிரவு பலத்த மழை மற்றும் அதிவேக காற்றுடன் கரையைக் கடந்தது.
இதனால் கடல் நீர் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் புகுந்தன. பலத்த காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன.

முறிந்த மரங்கள்
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 300க்கும் அதிகமான மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்தபோது சென்னை உட்பட தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளில் மழை பெய்தது.

மீட்புப் பணி
கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இருப்பினும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் சென்னையின் உள்பகுதிகள், வட மாவட்டங்களுக்கு நகரத் தொடங்கியதால் அப்பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல், தற்போது வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் இன்று பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

குழுவை ஏற்படுத்த வேண்டும்
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் அடிக்கடி புயல் பிரச்சனை வருகிறது. சென்னை மற்றும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் அரசை குறை கூற முடியாது. பேரிடர் மேலாண்மைக்கு சிறப்பு கவனம் அரசு செலுத்தி அதற்கு மாநிலம் முழுவதும் குழுவை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அரசை குறை சொல்ல முடியாது
தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள், அரசை இதில் குறை கூற முடியாது. தொடர்ந்து இதே போல் களப்பணியாற்ற வேண்டும் என தான் கேட்டுக்கொள்கிறோம். முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக அதிகாரம் உள்ளது." என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழ்நாடு அரசை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications