Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூ- டர்ன் அடிக்கிறதா? ராம்குமார் மரண வழக்கு?...புதிது புதிதாக கிளம்பும் அதிர்ச்சி ஆதாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிது புதிதாக கிளம்பும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம் விரைவில் ராம்குமார் மரண வழக்கில் பல்வேறு உண்மைகள் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த சுவாதி எனும் இளம்பெண்ணை அங்கு வந்த ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்றார்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ராம்குமார் வீடு

ராம்குமார் வீடு

ஜூலை 1 ஆம் தேதி ராம்குமாரின் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுவாதி மரணம்

சுவாதி மரணம்

சுவாதி மீது ராம்குமாருக்கு ஒரு தலை காதல் என சொல்லப்பட்டது. தனது காதலை ஏற்காததால் ராம்குமார் இந்த கொலையை நிகழ்த்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுவாதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலர் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் அதே ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மின்சார வயரை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடுவதாக ராயப்பேட்டை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அனுமதித்தனர்.

ஆதாரப்பூர்வம்

ஆதாரப்பூர்வம்

ஆனால் ராம்குமார் மரணமடைந்து விட்டதாக ஆய்வு செய்த மருத்துவர் தெரிவித்தார். சுவாதியை ராம்குமார்தான் கொலை செய்தார் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே தங்கள் மகன் ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். போராட்டம் நடந்தது. செப்.22 முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஊடக வெளிச்சம் இன்றி போனது ராம்குமார் விவகாரம்.

பரிசோதனை

பரிசோதனை

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் கையிலெடுத்த நிலையில் பல்வேறு தகவல்களை மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளது வழக்கு யூடர்ன் அடிக்கும் நிலைக்கு போவதாக தெரிகிறது. ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

நல்ல நிலையில் உடல் உறுப்புகள்

நல்ல நிலையில் உடல் உறுப்புகள்

மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் கடந்த 2016, அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மூளை, இதய திசுக்கள் , நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.

சாத்தியக் கூறுகள் இல்லை

சாத்தியக் கூறுகள் இல்லை

மின்சாரம் தாக்கினால் உடலில் இருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர் சான்று

மருத்துவர் சான்று

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத் துறை மருத்துவரும் வந்திருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. மேலும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

மின்சாரம் தாக்கியதில்

மின்சாரம் தாக்கியதில்

நான் வழங்கிய பதிவேட்டிலும் மின்சாரம் தாக்கியதால் ராம்குமார் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதே வேளையில் அவரது உடலில் விறைப்புத் தன்மை இருந்தது. பொதுவாக ஒருவர் இறந்து 12 மணி நேரம் கழித்துதான் விறைப்புத் தன்மை ஏற்படும். அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. இருந்த போதிலும் அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. உடலை நான் அவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்யவே இல்லை. அவருக்கு மின்சாரம் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக தவறுதலாக நான் முதலில் அளித்த தகவலில் கூறிவிட்டேன் என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார். ராம்குமார் வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் மரண வழக்கு எங்களை சரிவர விசாரிக்காமலே முடித்து வைக்கப்பட்டது என்பது வழக்கறிஞர் ராம்ராஜின் வாதம், ராம்குமார் மட்டுமே இக்கொலையை செய்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. சிறை மரணம், 12 மணி நேரம் கழித்து விரைப்புத்தன்மை வரும் என மருத்துவர் அளித்துள்ள வாக்குமூலம் அனைத்தும் பல்வேறு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, இது கண்டிப்பாக மீண்டும் விசாரிக்கப்பட்டால் பலர் சிக்குவார்கள் என்கிறார் ஓய்வு காவல் அதிகாரி ஒருவர். ராம்குமார் மரணம் வழக்கு தோண்டப்பட்டால் அது ராம்குமார் வழக்கோடு நிற்காது சுவாதி மரணத்தின் மர்மத்தையும் அது நீக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நம்மால் அதை மறுக்க முடியாதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+