நண்பேன்டா.. அமைச்சராகும் உதயநிதி.. விமர்சித்த எதிரணிகளை விளாசிய அன்பில் மகேஷ்..சுளீர் பதிலடி.. ஆஹா
சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் நாளை காலை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதனை விமர்சனம் செய்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் உதயநிதியை நண்பன் எனக்கூறி அவர் பெருமைப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுதொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நாளை அமைச்சராகும் உதயநிதி
உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்துள்ளார். அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் தகவல் வெளியிட்டுள்ளார். .

அன்பில் மகேஷ் பேட்டி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக, அவரது நண்பரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நண்பன் உதயநிதி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவாகவும், நண்பராகவும் உள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள். உதயநிதி அமைச்சராவது எனக்கு பெருமையாக உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வந்தார். அந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக வர வேண்டும் என தீர்மானங்கள் போடப்பட்டது. அப்போது தலைவர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சொன்னது ஒன்று மட்டுமே. உதயநிதி முதலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரட்டும். அதன்பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார். அந்த தேர்தலில் நாங்கள் நல்ல வெற்றியை பெற்றோம்.

தன்னடக்கம்
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். உங்களால் இந்த வெற்றி என உதயநிதி ஸ்டாலினிடம் கூறினோம். அப்போது இந்த வெற்றி ஸ்டாலினால், உடன்பிறப்புகளால், மக்களால் என மிகவும் தன்னடக்கத்துடன் சொன்னவர். அவருக்கு தற்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பொறுப்பிலும் அவர் எப்படி முழுகவனத்துடன் திறமையை செயல்படுத்தி வருகிறாரோ? அதேபோல் அமைச்சராகவும் உதயநிதி செயல்படுவார்.

மக்கள் தேவை அறிந்து..
எம்எல்ஏவாக தொகுதி மக்களுக்காக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மக்களின் தேவையை அறிந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தல் அண்ணன் எனக்கூறி உதயநிதியிடம் சிறுவன் சைக்கிள் கேட்டார். அவ்வளவு உரிமையோடு அவரை மக்கள் அணுகி வருகின்றனர். இதனால் உதயநிதி அமைச்சர் பொறுப்பையும் சிறப்பாக நிர்வகிப்பார்.

தமிழ்நாடு முழுவதும் சேவை
உதயநிதி அமைச்சராக வேண்டும் என எனது திருச்சி தெற்கு மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெறும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி எம்எல்ஏவாக சுருங்கிவிடாமல் தமிழ்நாடு முழுவதும் அவரது உழைப்பு, சேவை தேவை என்பதன் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் அதனை எடுத்து கூறினர். முதலமைச்சர் நல்ல முடிவு எடுத்து தற்போது உதயநிதியை அமைச்சராக்க ஒப்புதல் வழங்கி உள்ளார்'' என்றார்.

வேறு எந்த வேலை உள்ளது...
இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்வி எழுப்பபப்பட்டது. அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், ‛‛எதிர்க்கட்சிக்கு வேறு எந்த வேலை உள்ளது. எதிர்க்கட்சிகள் பாராட்டாமல் விமர்சனம் தான் செய்வார்கள். உதயநிதிக்கு இன்றைக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினாலும், 3 ஆண்டு கழித்து வழங்கினாலும், 30 ஆண்டுகள் கழித்து வழங்கினாலும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் தான் செய்வார்கள்.
இளைஞரணி செயலாளராக அவர் பொறுப்புக்கு வந்தபோது வராத விமர்சனமா இப்போது வந்துள்ளது. அந்த சமயத்தில் உதயநிதி ஒன்றை மட்டும் தான் கூறினார். எல்லாவற்றுக்கும் செயல் மூலம் பதிலடி கொடுப்பதாக கூறினார். அதனை செயல்படுத்தி காட்டினார். அதேபோன்று அவர் அமைச்சராகவும் நன்கு செயல்படுவார்'' என்றார்.












Click it and Unblock the Notifications