“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா.. சொத்து வரியை உயர்த்துனதே இதுக்குத்தான்”- ஒரே போடாக போட்ட அமைச்சர் நேரு!
சென்னை: ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்துவதற்கான சட்டத்தை தி.மு.க அரசு கொண்டு வந்தது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.
இந்நிலையில், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கான சொத்து வரியை 150% வரை உயர்த்தி தி.மு.க அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க ஆட்சியின்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.கவே ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரியை உயர்த்துவதா என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

வேற வழி தெரியல
சொத்து வரி உயர்வு குறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தற்போதைக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும், வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்ற மத்திய அரசின் நிபந்தனையால்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அமைச்சர் நேரு
இந்நிலையில், இன்று மக்களின் நலனுக்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் நேரு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிப்பதற்காகவே ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காகவே
மேலும், விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதற்கோ, யாரையும் சங்கடப்படுத்துவதற்கோ சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தேர்ந்தெடுத்த மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவுமே ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்.











Click it and Unblock the Notifications