முகக் கவசம் அணிவது அவசியம்.. அந்த ‘ரூல்’ விலக்கிக் கொள்ளப்படவே இல்லை .. அமைச்சர் மா.சு சொன்ன தகவல்!!
சென்னை : கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை, பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சீனா, ஜப்பான் போன்ற 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாயம் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை இன்று முதல் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் சற்று தலைதூக்கிய நிலையில் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. எனவே இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மத்திய அரசு, மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போதைய நிலவரத்திற்கேற்ப கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழக அரசும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அமைச்சர் மா.சு
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக முதல்வர் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டத்தையும் நடத்தி தமிழகத்தில் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

விமான நிலையங்களில் சோதனை
மேலும், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

6 மாதமாக இறப்பு இல்லை
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் நாள்தோறும் 4000 முதல் 5000 RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 10க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் முதல் தவணையில் 96 சதவீதமும் இரண்டாம் தவணையில் 92 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு நிகழவில்லை. இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மாஸ்க் அவசியம்
இருப்பினும் பொதுமக்கள் முகக்வசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் எதுவும் தமிழ்நாட்டில் விலக்கிக் கொள்ளப்படவில்லை. எனவே மக்கள் அவரவர் நலன் கருதி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்." என அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications