"அண்ணாமலை அறிவுப்பூர்வமா பேசுவார்னு நினைச்சேன்” சொன்னதை நிரூபிக்கணும் இப்ப.. பொங்கிய அமைச்சர் மா.சு!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெண்டரே இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் அதில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என அண்ணாமலை கூறுவது எந்த வகையில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முறைகேடு குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் திமுக அரசு மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டரை இறுதி செய்வதில் தனிநபர்கள் இருவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எப்படி அனுமதித்தார்? இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அறிவுப்பூர்வமா பேசுவார்னு நினைச்சேன்
இந்நிலையில், சற்று முன்பு சென்னை அம்பத்தூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுகாதாரத்துறை மீது முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணாமலை அறிவுப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் எனத் தெரிவித்தார்.

டெண்டரே இன்னும் முடியல
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டெண்டர் நிறைவடைவதற்கு முன்பே முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். இப்போதுதான் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் அதில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என அண்ணாமலை கூறுவது எந்த வகையில் நியாயம்? டெண்டர் பணிகள் முடியும் முன்பே, ஊழல் புகார் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணாமலை இந்த புகாரை நிரூபிக்க வேண்டும்.

யூகமா சொல்றாரு
அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து துறையின் அதிகாரி தீபக் ஐ.ஏ.எஸ்ஸிடம் கேட்டோம். டெண்டரே முடிவடையாதபோது இதில் எப்படி தவறு நடந்திருக்கும் என்றுதான் அவரும் சொல்கிறார். அண்ணாமலை யூகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டியுள்ளார். எப்படி நஷ்டம் என கணக்கு போட்டீர்கள் என அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் இருந்து பதிலை பெற வேண்டும். அவர் சொல்லும் பதிலில் உண்மை இல்லை என்றால் மற்ற துறைகளின் மீதும் அவர் வைத்துள்ள புகார்களின் உண்மைத்தன்மை வெட்டவெளிச்சமாகிவிடும்.

அண்ணாமலை நிரூபிக்கட்டும்
தவறு நடந்திருக்கிறது என்று சொன்னால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், டெண்டரே முடிவடையாத பணியில் இவ்வளவு கோடி இழப்பு என்று சொன்னால் அது நியாயமே இல்லாத ஒன்று. டெண்டர் நிறைவடைந்த பிறகு, அண்ணாமலை சொல்வது போல ஏதாவது முறைகேடு நடந்தது என நிரூபிக்கட்டும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications